அச்சுறுத்தல் உள்ள பிரமுகர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! டிஐஜி ஆலோசனை!

அச்சுறுத்தல் உள்ள பிரமுகர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! டிஐஜி ஆலோசனை!

 ஜி.சாந்தகுமார்,

 அச்சுறுத்தல் உள்ள பிரமுகர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கும் பாதுகாப்பு அளிக்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

  பாதுகாப்பு பிரிவு டிஐஜி திருநாவுக்கரசு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள அரசியல் தலைவர்கள் யார், யார் என்பது பற்றி அந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

 அதே போல்  ஏற்கனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள தலைவர்கள் யார், யார் என்ற பட்டியலையும் ஆய்வு செய்துள்ளனர். மேலும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத தலைவர்களுக்கு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்படுவது பற்றியும் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

   ஜூலை 5 ஆம் தேதி பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. அரசியல் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

  அப்படியிருக்க பாதுகாப்பு பிரிவு டிஐஜி திருநாவுக்கரசு தலைமையில் நேற்று ஆலோசனை நடந்துள்ளது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் தமிழக அரசுக்கு அறிக்கையாக சமர்பிக்கப்படும். இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

 குறிப்பாக அச்சுறுத்தல் ஏதும் இல்லாத பலர் ஒன்றுக்கு இரண்டு போலிசாரை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் கேட்டு பெற்றுக் கொண்டு கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படியிருப்பவர்கள் யார் யார் என்பதை உளவுத்துறையினர் அரசுக்கு தெரிவித்து வருவதாகவும் தகவல்.