ஒரே ஒரு போன்... அமைச்சர் ரகுபதியை கூல் ஆக்கிய முதலமைச்சர்!

ம.பா.கெஜராஜ்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழாவுக்கு முதல்வர் செல்லாததால் பல்வேறு வதந்திகள் இறக்கைக்கட்டி பரந்தது. அதற்கெல்லாம் ஒரு போன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான ரகுபதி அவர்களின் பேரன் டாக்டர் நாச்சியப்பன் ரகுபதிக்கு கடந்த 7ஆம் தேதி மிகச்சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
திருமண அழைப்பிதழ் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு நேரில் சென்று அமைச்சர் ரகுபதி கொடுத்தார். அப்படியிருக்க புதுக்கோட்டை ஜெ.ஜெ அறிவியல் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் 7ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி வந்து, பின்னர் கார் மூலம் புதுக்கோட்டை சென்று மணமக்களை வாழ்த்து வதாக திட்டம் இருந்தது.
ஆனால் முதல்வர் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இருப்பினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சில அமைச்சர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை.
இதனால் புதுக்கோட்டை திமுகவினர் ஆளாளுக்கு ஒரு கதையை பேசினார்கள். முதல்வருக்கு அமைச்சர் மீது ஏதோ வருத்தம் அதனால் தான் அவர் வரவில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டார்கள்.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் ரகுபதிக்கு முதல்வர் ஸ்டாலின் போன் போட்டு பேசியுள்ளார். தான் வராததற்கு வருந்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு, அதற்கான காரணங்களை சொன்னாராம்.
அதே போல் விக்கிரவாண்டி தேர்தல் பணிகளுக்காக பெரும்பாலான அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் களத்தில் அங்கு டேரா போட்டிருந்தனர். ஆகவே அமைச்சர் ரகுபதி பேரன் திருமணத்தில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை.
இதுதான் உண்மையான காரணம் என்பதை அறிந்த புதுக்கோட்டை உபிக்கள் சந்தோஷம் அடைந்தனர்.
தேர்தல் முடிந்த பின்னர் மணமக்களை பல அமைச்சர்கள் நேரில் வாழ்த்த உள்ளனர்.