வைகோ மகனுக்கு மாத்தி ஓட்டு போட்ட இருவர் யார்! செட்டப்பா?

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
தனது மகன் அரசியல் வாரிசாக வரமாட்டார் என்று கூவி வந்த வைகோ கடைசியில் அவரது வார்த்தையை மீறும்படியாகிவிட்டது.
ஆம் ம.தி.மு.கவின் தலைமைக் கழக செயலாளராக அவரது மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றின விவரம் வருமாறு,
ம.தி.மு.கவின் தலைமைக் கழகமான தாயகம் சென்னை எழும்பூரில் உள்ளது.
இங்கு நேற்று மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
கட்சியில் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்கலாமா? வேண்டாமா?' என்பது தொடர்பாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, `வையாபுரி கட்சிப் பதவியில் நியமிக்கப்படலாம்' என்ற குரல்கள் இருந்து வந்த நிலையில்` அரசியல் வாழ்வில் நான் அடைந்த துயரங்களை என் பிள்ளைகளும் பெற வேண்டுமா?' எனக் கூறி ஜகா வாங்கினார் வைகோ.
இந்நிலையில், நேற்று 20.1.2021 அன்று கூடிய கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டம் கூடியதும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன்,அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில இளைஞரணி செயலாளர் கோவை ஈஸ்வரன் உள்பட ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் பங்கேற்கவில்லை. தனது உடல்நிலை காரணமாக கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை எனக் கூறி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் கடிதம் கொடுத்தாராம். ம.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முன்னாள் எம்.பி கணேசமூர்த்தி உள்ளிட்ட 106 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, `தொடக்ககாலம் முதலே இந்த இயக்கத்துக்குள் துரை வரக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. இந்த இயக்கத்தில் நிர்வாகிகள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதுதான் இறுதி.
அந்த முடிவுக்கு நான் தடை போட முடியாது. கடந்த பொதுக்குழு கூட்டம் வரையிலும், துரை வரக் கூடாது என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன். பெரும்பான்மையான பொறுப்பாளர்களின் எண்ணம் எதுவோ அதன்படிதான் நடக்கும். ஏனென்றால், இது ஜனநாயக இயக்கம்.
மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்துத்தான் செயல்பட முடியும்' என்றார்.
பின்னர் "ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வைகோ கூறியபோது, `அவ்வாறு செய்ய வேண்டாம்' என கணேசமூர்த்தி கூறினார்.
இதனை ஏற்காத வைகோ, `என்னுடைய நிர்பந்தத்தால் பதவி வழங்கப்பட்டதாக நாளைக்கு யாரும் பேசிவிடக்கூடாது' எனக் கூறிவிட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கூறினார்.
பின்னர், `துரை அரசியலுக்கு வரலாமா, பதவி கொடுக்கலாமா?' என ஒரு தாளும், `வேண்டாம்' என ஒரு தாளும் கொடுக்கப்பட்டது. அந்தத் தாளை பூர்த்தி செய்துவிட்டு பெட்டியில் நிர்வாகிகள் போட்டனர்.
முடிவில், 106 பேரில் 104 பேர் துரை வையாபுரிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு தெரிவிக்காத 2 பேர் யார் எனத் தெரியவில்லை.
வைகோவின் மகனுக்கு பதவி கொடுக்கப்பட்டதில் ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதனாலேயே கோவை ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் தலைமைக் கழக கூட்டத்தை புறக்கணித்ததாகத் தெரிகிறது.
அதே போல் ரகசிய வாக்கெடுப்பில் கூட இருவர் மாற்றி போட்டுள்ளார்கள். அது செட்டப்பாக இருக்கலாம் அல்லது எதிர்ப்பாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.
எது எப்படியோ ம.தி.மு.க.விலும் வாரிசு அரசியல் வந்தாகிவிட்டது.