'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் தொடக்கம்! கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பாராட்டு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
அரசியல்வாதிகளைப் போல தன்னை டிரெண்டாக்கி வருகிறார் நடிகர் விஜய். அவர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார்.
கூடவே சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவீரர் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திரண்டு வந்து எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
அந்த வகையில், சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் காமராஜர் சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைவிட பலபடிகள் மேலே போய் காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான 'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் விஜய் பயிலகம் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் இலவச பாடசாலை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "மாணவர்களுக்காக விஜய் இலவச பாடசாலை தொடங்கியுள்ளது நல்ல விஷயம் தான். இல்லம் தேடி கல்வியின் நோக்கமே அதுதான். கொரோனா காலத்தில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களை சேர்பதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதற்கான பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுப்பட்டிருக்கிறார்கள்" என்று சொன்னார்.