அகில இந்திய மாநாட்டில் பாராட்டப்பட்ட தமிழக டி.எஸ்.பி பிரியதர்ஷினி!

ம.பா.கெஜராஜ்,
அகில இந்திய காவல் துறை அதிகாரிகளுக்கான அறிவியல் மாநாடு மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்த இரண்டு நாள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடக்கி வைத்துப் பேசினார். காவல் நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியதைக் குறித்தும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்து, அதன் மூலம் காவல் நிலைய வன்முறைகள், விதிமுறை மீறல்களை தடுப்பது குறித்தும் அறிவுறுத்தினார்.
இந்திய அளவில் பல காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், பல ஆராய்ச்சி கட்டுரைகளும் சமர்பிக்கப்பட்டு விளக்கப்பட்டன.
அதில் தமிழகத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம், செஞ்சி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி பிரியதர்ஷினி காவல்துறை அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டார்.
மத்திய காவல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட போது விழித்திரை மூலம் குற்றப் பதிவேடுகளை ஆராய்வது தொடர்பான கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.
அதாவது குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான
நபர்களின் விழி திரைகளை கேமரா மூலம் கண்காணித்து அவர்கள் கூறும் தகவல்கள் உண்மைதானா என்பதை கண்டறியும் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து பேசியுள்ளார்.
இந்த தகவல் தொழில்நுட்பம் சில உலக நாடுகளில் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவிலும் பயன்படுத்துவது மற்றும் அதன் அவசியம் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் தன்னுடைய உரையில் தெரிவித்தார்.
வழக்குகளின் போக்கினால் ஏற்படும் கால விரயத்தை குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளவேண்டிய மாறுதல்கள் குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்.
இவரின் கருத்துகளை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து காவல் உயர் அதிகாரிகளின் ஒப்புதலும் பாராட்டுதல்களுக் கிடைத்துள்ளது.
இந்தக் கருத்தரங்கு 23.04.2022 அன்று மாலையில் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேல் ஆகியோர் முன்னிலையில் இனிதே நிறைவடைந்தது.