கென்யாவுடன் ஒப்பந்தம் செய்த வேலூர் நறுவீ மருத்துவமனை! நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புரிந்துணர்வு!

கென்யாவுடன் ஒப்பந்தம் செய்த வேலூர் நறுவீ மருத்துவமனை! நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புரிந்துணர்வு!

ம.பா.கெஜராஜ்,

 கென்யா நாட்டின் கிசுமு மாகாண நோயாளிகளுக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நறுவீ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ மற்றும் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ மற்றும் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் ஆகியோர் பேசுகையில் கிசுமு மாகாணத்தில் இருந்து இதயம், நரம்பியல், காது மூக்கு தொண்டை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், கிசுமு நகரில் நறுவீ மருத்துவமனையின் கிளினிக் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

            இது சம்மந்தமாக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கூறுகையில் கென்யா நாட்டின் கிசுமு மாகாணத்தின் கவர்னர் அன்யாங் நியோங்கோ, சுகாதார அமைச்சர் டாக்டர் கிரிகோரி காண்டா, கிசுமு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் டாக்டர் ஜார்ஜ் ரே மற்றும் தொழில் நுட்ப ஆலோசகர்கள் நறுவீ மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

  மருத்துவ சேவை சம்மந்தமாக நறுவீ மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுவது சம்மந்தமாக நறுவீ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றியும், மருத்துவமனையில் உள்ள் மருத்துவ சாதனங்கள், நோயாளிகளுக்கான மருத்துவ சேவை, கட்டமைப்பு வசதி உள்ளிட்டவைகளை பற்றி நேரிடையாக பார்வையிட்டனர்.

  கிசுமு மாகாணத்திலிருந்து நோயாளிகளை நறுவீ மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கவும், அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

            மேலும், கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ அம்மாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னர் ஆவார். இவரது தலைமையின் கீழ் அம்மாநிலத்தில் சுகாதார துறை, மனித வளம், சேவைகள் துறை, உள் கட்டமைப்பு உள்ளிட்டவைகளின் அபிரிதமான வளர்ச்சியினை கண்டது. மேலும், பொருளாதார வளர்ச்சி, சமுக மேம்பாடு, சுற்று சூழலில் நிலைத்த தன்மை உள்ளிட்டவைகளை கூட்டுறவு முறையில் மேம்படுத்துவதற்கான உத்தியை கொண்டு வந்தவர் என்றார்.

கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ

            கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ கூறுகையில் கிசுமு நகரில் மிகப் பெரிய ஜார்மோகி ஒகிங்கா ஒடிங்கா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதி உள்ளது. இங்குள்ள நோயாளிகளுக்கு சில மருத்துவ சிகிச்சைக்காக நைரோபி, எல்டோரட் நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதோடு முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மருத்துவ துறையில் இந்திய நாடு மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதிகமாக இந்தியாவில் உள்ளனர்.

            நறுவீ மருத்துவமனை அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிறந்த மருத்துவமனையாக உள்ளது பற்றி அறிந்த நாங்கள் எங்கள் நாட்டிலிருந்து இதயம், நரம்பியல், காது மூக்கு தொண்டை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளோம்.

   மேலும், அடுத்தகட்டமாக இரத்த புற்று நோய், எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் நோயாளிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இது சம்மந்தமாக ஒரு கருத்தரங்கை கிசுமு மருத்துவமனையில் நடத்த உள்ளோம். நறுவீ மருத்துவமனையின் கிளினிக் ஒன்று கிசுமு நகரில் அமைக்கப்பட உள்ளது. அந்த கிளினிக் மூலமாக நறுவீ மருத்துவ நிபுணர்கள் வருகை தந்து எங்கள் மருத்துவர்களுக்கு பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்குவார்கள் என்றார்.

            நிகழ்ச்சியில் கிசுமு மாகாண கவர்னரின் மனைவி டாரத்தி நியோங்கோ, கிசுமு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் கிரிகோரி காண்டா, கிசுமு மாகாண ஜார்மோகி ஒகிங்கா ஒடிங்கா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் ஜார்ஜ் ரே, கவர்னரின் தொழில்நுட்ப ஆலோசகர் எட்டி இல்லா, நறுவீ மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.