ச்சே எப்படியெல்லாம் மூடி மறைக்கப் பார்க்குறாங்க?

ஜி.கே.சேகரன்,
கிராம சபை கூட்டத்திற்கு மக்களுக்கு முறையாக தகவலை தெரிவிக்காததால் கிராம மக்கள் முற்றுகையிட்டு தகறாறு செய்தனர்.
இன்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்ற அரசாணைக்கிணங்க பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லண்டன்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்னா தேவி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மேற்படி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளதாக 23ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மேல் ஊர் பொது மக்களுக்கு ஓரளவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது என்ற முறையான தகவல்களை முன்கூட்டியே சரியான முறையில் பொதுமக்களுக்கு தெரிவிக்காததால், தகவல் கிடைக்கப் பெறாமல் பல பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.
மேலும் கிராம சபை கூட்டத்தில் மொரசப்பள்ளி பஞ்சாயத்தில் பணிபுரியக்கூடிய துப்புரவு பணியாளர்கள் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட நபர்களை வைத்து கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக பொது மக்களுக்கு தெரியவந்தது.இதனையடுத்து மொரசப்பள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று கூட்டத்தை சரியான முறையில் நடத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் சரியான முறையில் பொதுமக்களுக்கு பதில் அளிக்காமல் புறக்கணிக்கபதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதுகுறித்து மொரசப்பள்ளி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை ஆற்றில் கொட்டுகின்றனர், இதனால் ஆற்றின் அருகே உள்ள குடிநீர் பாதிப்படைந்து கழிவுகள் கலந்த குடிநீர் ஆக எங்களுக்கு வருகிறது.
மொரசப்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என்று மூன்று ஆண்டு காலமாக கோரிக்கை வைத்தும் அவற்றை சீர் அமைக்கவில்லை.
இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது நிதி வரவில்லை என்று அலட்சியமாக கூறுகின்றனர்.
அதேபோல் ஊராட்சி செயலர் சரியாக பணிகளை செய்வதில்லை, காந்திநகர் பகுதியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மேலே மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் குப்பை கழிவுகள் குரங்கு கழிவுகள் உள்ளிட்டவை குடிநீரில் கலந்து குடிநீர் மாசு ஏற்படுகிறது . மாசடைந்த குடிநீரை தான் நாங்கள் குடித்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை புகார்தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது போன்ற பல பிரச்சனைகளை கிராமசபை கூட்டத்தில் விவாதிக்க சென்றால் கூட்டம் நடைபெறுவதை முறையாக தெரிவிக்காமல் ரகசிய கிராம சபை கூட்டம் நடத்தும் அதிகாரிகளையும் ஊராட்சிமன்ற தலைவரையும் கண்டிப்பதோடு,இச்சம்பவம் குறித்து உயர் மட்ட அதிகாரிகள் தகுந்த விசாரணை நடத்த வேண்டும் நல்லதொரு ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் அதிகாரிகள் மீதும் ஊராட்சித் தலைவர்கள் மீதும் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராம சபை கூட்டம் புறக்கணிப்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.