கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்:-அனைத்து ஊராட்சிகளிலும்  நடத்திட ஆட்சியர் அறிவுரை!

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்:-அனைத்து ஊராட்சிகளிலும்  நடத்திட ஆட்சியர் அறிவுரை!

ம.பா.கெஜராஜ்,

 கோமாரி நோய் தாக்கத்தை குறைத்திடும் வகையில்  கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை அனைத்து ஊராட்சிகளிலும் வழங்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை சொன்னார்.,

  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக காட்பாடி வட்டாரம் செம்பராயநல்லூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்பாடுகளை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் , இ.ஆ.ப. , அவர்கள் ஆய்வுசெய்தார்கள்.

  செம்பராயநல்லூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு திட்ட பயனாளிகள் மற்றும் உறபத்தியாளர் குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  கலந்துரையாடினார்.

  அப்போது ஊராட்சியைச் சார்ந்த திருமதி.க.தேவி, ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கமளித்தார்.

  அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான வேளாண் உபகரணங்கள் பற்றியும், இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்வதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

 மேலும், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் உள்ளது என்று பொது மக்கள் தெரிவித்ததால் , நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை அனைத்து ஊராட்சிகளிலும் வழங்க வேண்டும் என்று கால்நடைத்துறைக்கு அறிவுரை வழங்கினார்.

   அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை மூலம் பயனாளிக்கு கட்டித்தரப்பட்டுள்ள மாட்டுக் கொட்டகை மற்றும் அசோலா வளர்ப்பு தொட்டியினை பார்வையிட்டார்.

  இந்த ஆய்வின் போது செல்வி. ஐஸ்வர்யா , உதவி ஆட்சியர் ( பயிற்சி ) , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திரு.நீ.செந்தில் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.வே.வேல்முருகன் , செம்பராயநல்லூர் ஊராட்சித் தலைவர் திருமதி . ஜீவிதா ரமேஷ் , காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.