கழுவி..கழுவி ஊற்றிய துரைமுருகன்!ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள்!

கழுவி..கழுவி ஊற்றிய துரைமுருகன்!ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள்!

  ஜி.கே.சேகரன்,

 வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் காலதாமதமாக நடக்கிறது மக்கள் தெருக்களில் கூட நடக்க முடியவில்லை இதனை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என ஆய்வுகூட்டத்திற்கு பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.

 வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாநகராட்சியில் பொலிவு நகரம் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

   இதில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

  பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஸ்மார்ட் சிட்டி பணம் ஒதுக்கி நீண்ட நாட்களாகிவிட்டது.

 நியாயமாக பார்த்தால் ஸ்மார்ட் சிட்டியை முடித்து ஒப்படைத்திருக்க வேண்டும் இன்னும் 70 சதவிகித வேலைகள் பாக்கி உள்ளது.

  புகழ்பெற்ற ஒப்பந்ததாரர்கள் வேலை செய்யவில்லை எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து அவர்கள் அதனை துணை ஒப்பந்தமிட்டுள்ளனர். அதே போல் சுப்பையா என்பவர் ஒப்பந்தம் எடுத்து அவரும் துணை ஒப்பந்தம் விட்டுள்ளார்.

 துணை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்கிற விதிகுறைகளை மீறி ஒப்பந்தம் போட்டு துணை காண்ட் ராக்ட் விட்டிருக்கிறார்கள்.

  இதற்கே அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும். முந்தைய ஆட்சி அவர்களுக்கு பணத்தை கொடுப்பதில் மட்டும் மும்முரம் காட்டியிருக்கிறார்கள்.

  ஆனால் ஒரு தெருகூட சேறும் சகதியுமில்லாமல் இல்லை. தற்போது அவசர அவசரமாக தெருக்களில் பள்ளங்களை மூடுகிறார்கள் இதனால் குடிநீர் வாரியம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து அதனை சரி செய்ய வேண்டும்.

 ஏனோ தானோ என்று செய்து வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும் நான் 12 ஆம் தேதி மீண்டும் சாலைகளை ஆய்வு செய்வேன் அதனை சீரமைக்க வேண்டும் இரண்டொரு நாளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

  கேரள அரசு முல்லை பெரியாறு அணையை நிரப்பமாட்டோம் என்று கூறினார்கள் ஆனால் நாங்கள் நிரப்பி காட்டியுள்ளோம் என்று பேட்டியில் சொன்னார்.