காலவதியான ஓபிஎஸ்- இ.பி.எஸ்.பதவிகள்! அதிமுகவுக்கு யாருப்பா தலைவர்?

ம.பா.கெஜராஜ்,
2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்த அதிமுகவில், அதன் பின்னர் உட்கட்சி பிரச்சனை வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்தார். குறிப்பாக முதல்வராக பதவி வகித்த 4 ஆண்டுகளிலேயே பேஸ்மட்டத்தை வலுவாக போட்டிருந்தார்.
இந்த ஆண்டு ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சியின் பிளவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நீக்கம், ஆதரவாளர்கள் பிரிந்தது என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி அரசியல் களம் அதகளமானது.
இப்படி 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒரு விஷயத்தை பலரும் மறந்துவிட்டனர்.
எடப்பாடி பழனிசாமியின் தற்கால இடைக்கால பொதுச் செயலாளர் பதவி காலாவதியாகி விட்டது. ஏனெனில் ஜூலை 11ஆம் தேதி (11.07.2022) நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக உயர்மட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.
இந்த தீர்மானம் அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்றைய முன் தினம் (10.11.2022) எடப்பாடி பழனிசாமியின் பதவி முடிவுக்கு வந்துவிட்டது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக 2017 செப்டம்பரில் தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவி அடுத்த 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டது.
அப்படி பார்த்தால் கடந்த செப்டம்பர் மாதமே ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்காலமும் நிறைவடைந்து விட்டது. இதன்மூலம் அதிமுகவை வழிநடத்தக் கூடிய தலைமைப் பொறுப்பில் தற்போது ஓபிஎஸ்சும் இல்லை. இபிஎஸ்சும் இல்லை,
அப்படின்னா யாருப்பா அதிமுகவை வழி நடத்துவது?
ஒருவேளை நீதிமன்றங்கள் முடிவு சொல்லுமோ?