சிறையிலிருந்து ஸ்கெட்ச்! முன்பகை... எம்பி சீட்டு கிடைக்காத கோபம்! இதுதான் ஆம்ஸ்ட்ராங்கொலைக்கு காரணமாம்!

சிறையிலிருந்து ஸ்கெட்ச்! முன்பகை... எம்பி சீட்டு கிடைக்காத கோபம்! இதுதான் ஆம்ஸ்ட்ராங்கொலைக்கு காரணமாம்!

ஆ.ஜோ,

 சிறையிலிருந்து ஆம்ஸ்ட்ராங் கொலையை நிகழ்த்தியவரின் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் எம்பி சீட்டு கிடைக்காத கோபம் மற்றும் முன் பகை ஆகிய காரணங்களால் கொலை நிகழ்த்தப்பட்டதாக போலீஸார் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் ¢கைது செய்யப்பட்டனர். இவர்களில் போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார்.

 இந்நிலையில் மேலும் ஒரு முக்கிய புள்ளி இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அஸ்வத்தாமன். இவர்  தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தவர். தற்போது கைதானதால் அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

 இந்த கைது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்திருப்பதாவது.

 அஸ்வத்தாமனுக்கு, ஆம்ஸ்ட்ராங்குடன் பல ஆண்டு பகை இருந்து வந்தது. இதனால் சிறையில் உள்ள அவரது  தந்தை நாகாந்திரனுடன் சேர்ந்து கூலிப்படையினர் மூலம் கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார்.

    அவரது தந்தை நாகேந்திரன் விரைவில் கைது செய்யப்பட உள்ளார்.

 பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

   நன்னடத்தை அடிப்படையில், அவர் விடுதலையாகும் சூழல் உருவான நேரத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசுவை திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.

  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் அழுத்தம் கொடுத்த நிலையில், இந்த கொலை வழக்கிலும் ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டார். இதனால், அவர் விடுதலையாகும் வாய்ப்பு பறிபோனது.

  இந்த சூழலில், நாகேந்திரன் மகனும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அஸ்வத்தாமன் கடந்த ஆண்டு மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை பகுதியை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.10 கோடி பறித்ததாக புகார் எழுந்தது.

 இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த அஸ்வத்தாமனை ஆவடி மாநகர போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 இது போன்ற காரணங்களால் கடந்த மக்களவை தேர்தலில் அஸ்வத்தாமனுக்கு எம்.பி. சீட் கிடைக்காமல் போனது.

 ஆம்ஸ்ட்ராங்தான் இதற்கு காரணம் என்று கருதிய தந்தையும், மகனும் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர். தேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தான் இதில் நேரடியாக ஈடுபட முடியாது என்பதால், பொன்னை பாலு மற்றும் கூட்டாளிகளின் உதவியுடன் இதை செயல்படுத்தி உள்ளார் அஸ்வத்தாமன். நிழல் உலக தாதாவான சம்போ செந்திலிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.

 இந்த சம்போ செந்தில் மீது 3 கொலை வழக்கு, வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் போனில் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்து வரும் அவரது இருப்பிடத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை. கூலிப்படையினருக்கு ஹவாலா முறையிலேயே பணம் கைமாறியுள்ளது.

 இருந்தாலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட  அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்கிறார்கள் போலீசார்.

JUST CLICK 

என் கணவரையும் என்கவுண்டர் செய்யப் போகிறார்கள்... ரவுடி நாகேந்திரனின் மனைவி புகார்!