கேடு கெட்ட திருப்பத்தூர் பேருந்து நிலையம்! வி.சி.எம். வீதியில் ஆக்கிரமிப்பு!

ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்திலிருந்து கழிவுநீர் வெளியேறி  சாலையில் தேங்கிக்கிடக்கிறது.  அப்பகுதியை கடப்பவர்கள் மூக்கை பொத்திக் கொண்டு போக வேண்டியதாக உள்ளது. அத்துடன்  பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள வி.சி.எம். வீதியில் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகிறது.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

 இந்த புதிய பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் நகராட்சியால் டெண்டர் விடப்பட்ட கட்டண கழிப்பிடம் உள்ளது.   கட்டணக் கழிப்பிடத்தை ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உபயோகித்து வருகின்றனர்.

 இந்த கட்டண கழிப்பிடத்தில் முறையான செப்டிக் டேங்க் இல்லாததால் அருகே உள்ள கால்வாயில் பைப் அமைத்து மனிதக் கழிவுகள் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

 இந்த கழிவு நீர், பேருந்துகள் வெளியே வரும் முக்கிய பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடி குட்டைப் போல் தேங்கியிருப்பதுடன்அருகே உள்ள  கடைகளுக்குள் விரைவில் புகுந்துவிடும் ஆபத்து உள்ளது.  மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த கழிவுநீரை மிதித்துக் கொண்டு தான் கடந்து கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

 இது குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முனை(ற) கோரிக்கைகள் விடுத்தும் கூட அவர்கள் இதை சீர்ப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லையாம்.

 அதே போல் பேருந்து நிலையம் அருகில் உள்ள விசிஎம் வீதி, முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பில் உள்ளது.  கடைகளை விரித்து ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்பு கடைகாரர்களிடம் சில ரவுடிகள் கட்சி லேபிலை வைத்துக் கொண்டு சுங்கம் வசூலிக்கிறார்களாம். அவர்கள் தான் இதற்கு பாதுகாப்பாம்.

 நகராட்சி அதிகாரிகள் ஒருபக்கமும், நகர காவல் நிலையத்தார் ஒருப்பக்கமும் கிடைத்ததை பெற்றுக் கொண்டு வேடிக்கை  பார்த்து வருகிறார்கள். ஆனால் இதில் பாதிப்பது என்னமோ பொதுமக்கள் தான்.

  இது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் தெரிவிக்கையில் அதிகாரிகள் மாதாமாதம் அரசாங்க சம்பளம் வாங்குகிறார்கள்.   உண்மையிலேயே அவர்களுக்கு மனச்சாட்சி இருந்தால் கட்டண கழிபிடத்தின் சுகாதார சீர் கேட்டையும், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள விசிஎம் வீதி போன்ற பல இடங்களையும் சீர்படுத்த வேண்டும்.

அதை விடுத்து கிம்பளத்துக்காக ஜொல்லு விட்டீங்கன்னா சட்டபடி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார்கள்.