ரயில் பயணத்தில் கப்சிப்!! மீறீனால் நடவடிக்கை பாயும்!

 ரயில் பயணத்தில் கப்சிப்!! மீறீனால் நடவடிக்கை பாயும்!

  ஜீ.சாந்தகுமார், 

  ரயில் பயணத்துக்கான புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, இனி சக பயணிகள் மொபைல் போனில் சத்தமாக பேசவோ, சத்தமாக பாடல்களைக் கேட்கவோ கூடாது. அவ்வாறு தொந்தரவு செய்வதாகப் பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தால் தொந்தரவு செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே நடவடிக்கை எடுக்கும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இந்த புதிய விதிமுறைப்படி, பயணிகள் தரப்பிலிருந்து புகார் வந்தால் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அனைத்து மண்டலங்களுக்கும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

   60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடியாக உதவி வழங்குவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  பக்கத்து சீட்டில் இருக்கும் பயணிகளின் மொபைலில் சத்தமாக பேசுவது அல்லது பாடல் கேட்பது போன்றவை தொந்தரவு தருவதாக பயணிகள் அடிக்கடி புகார் வருகிறது, இதுதவிர இரவு நேரத்தில் கும்பலாக ரயிலேறுபவர்கள் சத்தமாகப் பேசுவதாகவும் புகார்கள் வருகின்றன. இதனால் பயணிகளின் தூக்கம் கெடுகிறது. அதேபோல, இரவு நேரங்களில் மற்றவர்களைத் தூங்கவிடாமல் லைட் போட்டு வைப்பது போன்ற பிரச்சினைகளும் உள்ளன.

 ஆக, புதிய விதிமுறை இரவு 10 மணிக்குப் பிறகு அமலுக்கு வரும். அந்த நேரங்களில் எந்தப் பயணியும் சத்தமாக பேசவோ, சத்தமாக மொபைலில் பாட்டு கேட்கவோ கூடாது. இரவு நேரங்களில் முடிந்த வரையில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட வேண்டும். இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும். சோதனை ஊழியர்கள், ஆர்பிஎஃப், எலக்ட்ரீஷியன், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நல்ல விஷயம் தான்.