இதை போய் மூடலாமா மத்திய அரசே!

இதை போய் மூடலாமா மத்திய அரசே!

க.பாலகுரு,

 திருவாரூரில்  செயல்பட்ட  RMS அஞ்சல் பதிப்பகத்தை மூடும் மத்திய அரசை கண்டித்து, திருவாரூர் தபால் தலைமை அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்ட மக்களுக்கு விரைவாகவும் எளிமையுடனும் பணியாற்றி வந்த திருவாரூர் RMS அஞ்சல் பதிப்பகத்தை மூடுவதாக  மத்திய அரசு அறிவித்தது. இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் வர்த்தகர்கள் மாணவர்கள் பொதுமக்கள் இனி மாலை 6 மணிக்கு மேல் தபால்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருவாரூர் தபால் தலைமை அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

  அதன்படி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் திருவாரூரில் அமைந்துள்ள தலைமை போராட்ட ஒருங்கிணைப்பாளர் சிபிஐ தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் பிஎஸ் மாசிலாமணி முன்னிலையில்  தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகரச்செயலாளர் வாரைபிரகாஷ், காங்கிரஸ் நகரச் செயலாளர் விகேஸ். அருள் , சிபிஐ மாவட்டசெயலாளர் (பொ )கேசவராஜ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன், திராவிடர் கழகம் மாவட்ட துணை தலைவர் அருண்காந்தி, வர்த்தகர் சங்க நிர்வாகிகள்  சிஏ. பாலு , குமரேசன் மற்றும் சேவை சங்கங்கள் , நுகர்வோர் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து - அரசியல் கட்சிகள், திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம், சேவை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள்,100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.