அரசு புறம்போக்கு இடத்தை வேறு பகுதியினருக்கு வழங்குவதா?கிராம மக்கள் போராட்டம்!

அரசு புறம்போக்கு இடத்தை வேறு பகுதியினருக்கு வழங்குவதா?கிராம மக்கள் போராட்டம்!

 கு.சேகரன்,

  இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு ஊராட்சியில்  சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .

 அந்த ஊராட்சியில் 9.83 ஏக்கர் பரப்பளவில் அரசு தோப்பு புறம்போக்கு இடம் உள்ளது. மேலும் அப்பகுதியை விவசாயம் செய்வதற்காக அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

   தற்போது அப்பகுதியை அரசு கையகப்படுத்தி உள்ளதாகவும் மேலும் அந்த ஊராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள அரசு தோப்பு புறம்போக்கு இடத்தினை தங்களது கிராம பகுதிகளிலே வீட்டுமனை பட்டா இல்லாமல் மிகவும் வறுமையில் வசித்து வருகின்றனர்.

 அம்மாதிரியான குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவாக வழங்க வேண்டும் எனவும் மேலும் கிராமப் பகுதியில் ஏராளமான இளைஞர்கள் மாணவ மாணவிகள் இருப்பதால் அவர்களுக்கு பயன்படும் வகையில் நூலகம் உடற்பயிற்சி கூடம் விளையாட்டு மைதானம்  உள்ளிட்ட பல்வேறு பொது பயன்பாட்டிற்கான இடமாக மாற்றி அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர்.

   இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தற்போது இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தின் கீழ் வெளி கிராமங்களை சேர்ந்த நபர்களுக்கு இடம் வழங்கப்பட உள்ளதை கண்டித்து கரிவேடு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட செய்தனர்.

  பின்னர் கிராம மக்களின் கோரிக்கைகளைக் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவினை வழங்க உள்ளதாகவும் கரிவேடு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.