மழை பாதிப்புகளுக்கு எதிராக துரித நடவடிக்கை! பரபரப்பான ஏற்பாடுகள் தயார்! சுழன்று பணியாற்றும்  வேலூர் மாவட்ட நிர்வாகம்!!

கு.அசோக்,

வேலூரில் வடக்கு கிழக்கு பருவ மழை முன் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜய கார்த்திகேயன் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்தார். 

 வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

  நகர்புற வாழ்விட மேம்பாட்டு மேலாண் இணை இயக்குநர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான விஜயகார்த்திகேயன் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி முன்னிலையிலும் நடந்த இதில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்

  பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  மேலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள புகார் பதிவேடுகளை ஆய்வு செய்து, அதில் புகார் தெரிவித்திருந்த திரு. கணேசன், என்பவரின் தொலைபேசிக்கு தன்னுடைய தொலைபேசியிலிருந்து அழைத்து அவருடைய புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என கேட்டறிந்தார்.

  புகார் தாரர் அவருடைய பகுதியில் மழைநீர் தேங்கியதாக புகார் அளித்ததாகவும், அதன்மீது அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

   பின்னர் செய்தியாளர்களிடம்  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது.

 வேலூர் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 ஜ் 7 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண். 0416-2258016   என்ற தொலைபேசி எண்.93840 56214  என்ற வாட்ஸ் அப் எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  மேலும் பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் வானிலை அறிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளவும்,  புகார் தெரிவிக்கவும் டிஎன்.அலர்ட்  என்ற கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேலூர் மாவட்டத்தில் 1230 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

 இவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு பணி குழுவினரால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் கடந்த கால மழையினை கணக்கில் கொண்டு 23 இடங்கள் தாழ்வான பகுதிகள், அதாவது வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

 தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதிக்காத வகையில் மீட்டு தங்க வைப்பதற்காக மாவட்டத்தில் 26 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த 26 முகாம்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 நெடுஞ்சாலை துறையின் 23 பாலங்கள் மற்றும் 5658 சிறு பாலங்கள் மழை நீர் எளிதில் செல்லும் வகையில் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளன.

  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 608 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்பதற்காக 12 நாட்டு படகுகள் தயார் நிலையில் உள்ளன. மழை பொழிவனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் பொழுது மாநில பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரை உதவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ள ஏதுவாக 200 நபர்கள் தங்கக்கூடிய அளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் தயார் நிலையில் உள்ளது.

 மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்க அணைகளின் நீர் இருப்பு விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 86 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான அளவில் நீர் உள்ளது.

 12 ஏரிகளில் 25 முதல் 50 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. 2 ஏரிகளில்  மட்டும் 50 முதல் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

  ஒரு ஏரி மட்டும் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. அனைத்து ஏரிகளும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 132 ஏரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  இதுபோக மாவட்டத்தில் 731 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. அவற்றின் நீர் இருப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மர அறுவை இயந்திரங்கள், விளக்குகள்,எலட்ரிக் ஜெனரேட்டர், புல்டோசர்ஸ், லாரி, ஜே.சி.பி, கிரேன்ஸ், ஆம்புலன்ஸ் என மொத்தம் 751  மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன என சொன்னார்.

இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் பல அதிகாரிகள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டு இருந்ததும், செல்போன்களை எடுத்து நோண்டிக் கொண்டும் இருந்ததும் சற்று வருத்தம் அளித்தது.