ஒரே ஒரு அவசர சட்டம் போடுங்க! ஆறு மாசதுக்குள் பேசுங்க... விவசாயிகள் போராட்டமே தேவையில்லையே?

உ.சசிகுமார்,
இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கும் போராட்டமாக விவசாயிகள் போராட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் ஒரே ஒரு அவசர சட்டம் போடுங்க! ஆறு மாசதுக்குள் பேசுங்க... விவசாயிகள் போராட்டமே தேவையில்லையே என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சர்வான் சிங் பந்தா தெரிவித்திருக்கிறார்.
"டெல்லி சலோ" என்ற பெயரில் மிகப்பெரிய போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் முன்னெடுத்துள்ளனர்.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், மின்சார சட்டம் 2020 ரத்து, லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி சென்ற விவசாயிகளை எல்லைப் பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.
ஆணிகள், சிமெண்ட் தடுப்புகள், இரும்பு சுழல் வேலிகள், துணை ராணுவம், கண்ணீர் புகைக்குண்டுகள், ட்ரோன்கள் என விவசாயிகளை தடுக்கவும், விரட்டி அடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கண்ணீர் புகைக்குண்டுகளால் கண்ணீர் சிந்தியும், அடக்குமுறைகளுக்கு எதிர்கொண்டும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சர்வான் சிங் பந்தர், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு நினைத்தால் ஒரே இரவில் அவசர சட்டம் கொண்டு வந்துவிட முடியும்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நினைத்தால் இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கலாம். அதன்பிறகு உரிய விவாதம் நடத்தலாம். அவசர சட்டம் 6 மாதங்கள் செல்லுபடியாகும். அதற்குள் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி விவசாயிகளுக்கு சாதகமான சட்டத்தை இயற்றலாம்.
விவசாய கடன் தள்ளுபடி செய்யும் வகையில், வங்கிகள் மூலம் பட்டியலை பெற்று விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் மாநில அரசுகள் உடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. பொதுத்துறை வங்கிகளை தொடர்பு கொண்டு மத்திய அரசு விவசாயக் கடன்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்.