"சரக்கு பார்" ஆக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்!- நோயாளிகள் அச்சம்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நோயாளிகள் வருவதற்கு தயங்குவதாகவும், மது பிரியர்களின் அட்டகாசத்தால் பணி செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கும், அச்சத்துக்கும் ஆளாகியுள்ளதாக செவிலியர் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட வளையாம்பட்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஒரு செவிலியர் மற்றும் ஊழியர் ஒருவர் என இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச் சுவர் இல்லாததால் பலர் அங்கு மது குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களை போட்டு விடுகின்றனர். மேலும் சமூக விரோத செயல்களுக்காக அந்த சுகாதார மையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்கு தயங்குவதாகவும், அங்கு பணிபுரியும் செவிலியர் மற்றும் ஊழியர் அச்சத்துடன் பணிபுரிவதாகவும் தெரிகிறது.
மேலும் சுகாதார சீர்கேடு நிறைந்து கிடப்பதால் தினமும் அதனை சுத்தப்படுத்தக்கூடிய பணியும் அவர்களை வாட்டுகிறது.
இது சம்பந்தமாக சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டும் வளையாம்பட்டு பகுதி மக்கள், அவசர சிகிச்சைக்கு வாணியம்பாடி மருத்துவமனைக்கு செல்ல முற்படும் நேரங்களில் அங்குள்ள ரயில்வே கேட் மூடி விடுவதால் அவசர சிகிச்சைக்கு செல்ல முடியவில்லை.
ஆகவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறக்கூடிய சூழல் ஏற்படுகிறது.
ஆனால் இது போன்ற சமூக விரோதி செயல்களால் அங்கும் சிகிச்சைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்று சுவர் எழுப்பி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
நியாயமான கோரிக்கை என்பதால் மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட துறையை முடுக்கி விட்டு, சமூக விரோத செயல்களை கட்டுபடுத்திடவும் நோயாளிகளும், பணியாளர்களும் அச்சமின்றி வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.