விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாதது ஏன்? பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளரை வெற்றி பெறவைக்க வழியா?

ம.பா.கெஜராஜ்,
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாதது ஏன்? பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளரை வெற்றி பெறவைக்க வழியா என்று அரசியல் திறனாய்வாளர்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள். ஆனால் இது மாதிரியான குறுக்கு யோனைக்கெல்லாம் பழனிச்சாமி அறிக்கையிலேயே பதில் இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று அறிவித்துள்ள நிலையில் அங்கு கூட்டணி கட்சியான தேமுதிக தமது வேட்பாளரை நிறுத்துமா என்று எதிர்பார்க்கபடுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் எம். எல். ஏ வாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். ஆகவே மக்களவை தேர்தலுடன் சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அதற்கான அறிவிப்பை வெளியிடாமல் காலியான தொகுதி என அறிவித்தது.
தற்போது இத்தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ள சூழலில் திமுக சார்பில் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
பாமக. சார்பாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சி.அன்புமணிக்கு சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் ஓமியோபதி மருத்துவர் அபிநயா நிறுத்தப்பட்டுள்ளார். ஆக அங்கு தற்போதைக்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
அப்படியிருக்க விக்ரவாண்டியில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறதா அல்லது கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு அந்த வாய்ப்பை தள்ளிவிடுமா என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினார்.
அப்போது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது என முடிவு செய்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுகவினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து வெற்றி பெற்றனர்.
திமுகவினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 2009-ல் நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அதே ஆண்டில் பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத்தேர்தல்களை ஜெயலலிதா புறக்கணித்தார்.
2006-ல் திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், திமுகவினரால் வெளிப்படையாக நடத்தப்பட்ட வன்முறைகள், அராஜகங்கள் போன்றவற்றை மக்கள் அனைவரும் நன்கு அறிவர். அதேபோல், 2022 பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அரங்கேற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
`திருமங்கலம் பார்முலா' என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப்போல, `ஈரோடு கிழக்கு பார்முலா' என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதைப்போல், வாக்காளர்களை அடைத்து அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது.
அந்த வகையில், திமுக ஆட்சியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார் கள். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது.
எனவே ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. திமுக ஆட்சியின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவின் மக்களாட்சியை மீண்டும் மலரச் செய்வது உறுதி என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொகுதி நிலவரம்,
இந்த இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் அவர் திமுக வேட்பாளருக்கு செம போட்டியை ஏற்படுத்துவார் என்று பேசப்பட்டது.
அதற்கு சான்றாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி (தனி)க்குட்பட்ட விக்ரவாண்டியில் கட்சிகள் பெற்ற வாக்குகளை வைத்து கணக்கிட்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் மட்டும் 72 ஆயிரத்து 188 வாக்குகள் பெற்றார்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் 32 ஆயிரத்து 198 வாக்குகள் பெற்றார்.
இந்த வாக்குகள் பெற்று இருப்பதால், இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கடும் போட்டி ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இந்த இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவுடன் தே.மு.தி.க. தன வேட்பாளரை நிறுத்தும் என்று தொண்டர்கள் எதிர்பார்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அதிமுகவைப் போலவே தேமுதிக வும் இந்த தேர்தலில் இருந்து விலகியே இருக்கும். இதனால் அவர்கள் மறைமுகமாக பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளருக்கு ஆதரவை கொடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.