விஜயின் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போட முயலும் போலீசார்!

விஜயின் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போட முயலும் போலீசார்!

 அ.கார்திஷ்வரன்,

  அரசியல் பிரச்சாரத்தை துவக்குவதற்கு சென்ட்டிமென்ட்டாக நம்பப்படும் திருச்சியில் இருந்து விஜய் தனது சட்டப்பேரவை தேர்தல் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார் என்று நேற்று செய்திகள் வெளியான நிலையில், பாதுகாப்பு காரணம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையுறூகளை சுட்டிக்காட்டி அக்கட்சியினர் அலைக்கழிக்கப்பட்டனர்.

 இது பற்றின விவரம் வருமாறு,

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். 

 விமான நிலையத்தில் அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் எதிரேயுள்ள சித்தி விநாயகர் கோயிலில் புஸ்ஸி ஆனந்த் கொண்டு வந்த மனுவை வைத்து வழிபாடு நடத்தினார்.

அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் சென்றார்.

   அங்கு ஆணையர் காமினியை நேரில் சந்தித்து திருச்சி மாநகரத்தில் மரக்கடை, காந்தி மார்க்கெட், பால்பண்ணை, சென்னை புறவழிச்சாலை வரை 'ரோடு ஷோ' நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தார்.

   ஆனால், 'திருச்சி மாநகரம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொகை அடர்த்தியான பகுதி. எனவே யாருக்கும் இங்கு 'ரோடு ஷோ' நடத்த அனுமதி இல்லை' என்று ஆணையர் தரப்பில் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

  அதையடுத்து, சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரினர்.

அதற்கு, 'திருச்சி மாநகரத்தில் மொத்தம் 45 இடங்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்படும். அதில் சத்திரம் பேருந்து நிலையம் இல்லை' என்றனர்.

 அதையடுத்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அல்லது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்புறம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கோரி மனு கொடுப்பார்கள் என்று தெரிகிறது.

தற்போதைய நிலையில் வரும் செப்.13-ம் தேதி திருச்சியில் இருந்து தவெக தலைவர் விஜய் தனது சட்டப்பேரவை தேர்தல் பயணத்தை துவங்குவது உறுதியாகி உள்ளது.

 இந்நிலையில் அக்கட்சிய்ன் தலைவர் விஜய் திருச்சியில் 2 நாட்கள் தங்கியிருந்து ஒரு மாவட்டத்திற்கு இரண்டு தொகுதியில் பிரச்சாரம் செய்வதென ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் நெருக்கடி, பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி, விஜய்க்கு திருச்சியில் உள்ள பிரபல ஓட்டல்கள் அறைகள் ஒதுக்க மறுத்துவிட்டன.

 இதனால், சென்னையில் இருந்து அதிகாலையில் கிளம்பி திருச்சி வரும் விஜய், மீண்டும் பிரச்சாரத்தை முடித்து இரவு சென்னை திரும்புவற்கு ஏதுவாக பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செப்.13-ம் தேதி காலை  திருச்சிக்கு வருகை தரும் விஜய் மரக்கடை எம்ஜிஆர் சிலை அல்லது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரம் செய்கிறார்.

முன்பாக சென்னையில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வருகை தரும் விஜய், அங்கிருந்து தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை வரை ஊர்வலமாக வருகிறார்.

அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தொகுதியில் குன்னம் பேருந்து நிலையத்திலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்.

   அன்றிரவே சென்னைக்கு பிரச்சார வாகனம் மூலம் வீடு திரும்புகிறார். இதேபாணியில், ஒருநாள் விட்டு ஒருநாள் என மொத்தம் 100 நாட்கள் தொடர்ந்து விஜய் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.