கொத்தடிமைகளை மீட்ட அதிகாரிகள்! காவல் நிலையத்தில் வழக்கு பதிவு!

கு.அசோக்,
செங்கல் சூலையில் கடந்த நான்கு மாதங்களாக கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி தலைமையிலான அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த புளியங்கண்ணு பகுதியில் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலை செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூலையில் பலர் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
அதில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி, கார்த்திக், சத்தியா, சீனு, சௌந்தர்யா ஆகிய 5 பேரும் கடந்த நான்கு மாதங்களாக செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவது உறுதியானது.
பின்னர் அந்த 5 பேரையும் வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு அவர்களுடைய சொந்த ஊரான திருத்தணி பகுதிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொத்தடிமைகளாக நடத்தி வந்த சுரேஷ் என்பவர் மீது வருவாய் நிர்வாக அலுவலர் சிவகுமார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் கொத்தடிமை முறை நடைமுறையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.