நாட்டில் நிலவும் தற்போதைய சூழலுக்கு நுபுர் சர்மாவே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் கண்டனம்!

ம.பா.கெஜராஜ்,
நுபுர் சர்மா...இந்த பெயர் தான் தற்போது பல்வேறு கோணங்களில் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது...பேசப்படுகிறது, நீதிமன்றத்தையும் கோபப்படவைத்திருக்கிறது.
சற்று விரிவாக பார்ப்போம்,
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
ஞானவாபி மசூதி குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசிய நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறினார். இது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிண்டால், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். நூபுர் சர்மாவும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நுபுர் சர்மாவின் இந்த செயலுக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவின் தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தன. மேலும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
டெல்லி ஜும்மா மசூதியில் தொடங்கிய இந்தப் போராட்டமானது தற்போது நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ளது. பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு விதிக்கும் அளவுக்கு போராட்டத்தின் தீவிரம் சென்று கொண்டிருந்த நிலையில் தாலிபான்கள் மற்றும் அல்கொய்தா அமைப்பினர் விவகாரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கு தொடரப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்.ஐ.ஆர்.கள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
மேற்படி மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் நுபர் சர்மாவை கடுமையாக சாடியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், நாடு முழுவதும் தீ பற்றி எரியும் சூழலை ஒன்றை நபராக நுபுர் சர்மா உருவாக்கியுள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய சூழலுக்கு அவரே பொறுப்பு என்றார்.
உதய்பூரில் நடந்த சம்பவத்திற்கு நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சே காரணமாக அமைந்துவிட்டது.டிவியில் தோன்றி அவர் ஒட்டு மொத்த நாட்டின் முன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
டெல்லி காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக ஏற்கனவே ஆஜராகி இருப்பதாக நுபூர் ஷர்மா தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.