மாணவிக்காக முரட்டுத்தனமாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்!

 எஸ்.பாண்டி,

 அரசு பள்ளிக்கூட மாணவர்கள் முரட்டுத்தனமாக தாக்கிக் கொள்ளும் பரபரப்பான காட்சிகள் சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.ஒரு மாணவிக்காக ஏற்பட்ட இந்த மோதல் குறித்து  தகவல் அறிந்த கல்வி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் முகாமிட்டு விசாரித்து வருகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு,

   திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் உள்ள பழம்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

  இந்நிலையில் கடந்த 26ம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வளாகத்திற்குள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் முரட்டுத்தனமாக சண்டை போட்டுக் கொண்டனர்.

  அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் இவர்களிடம் பேசாமல் இருந்துள்ளதே மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேற்படி தாக்கிக்கொண்ட காட்சிகளை அங்கிருந்த சக மாணவன் ஒருவன் செல்போனில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். இதையறிந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் பள்ளி நேரங்களில் வெளியே சுற்றித் திரிவதாகவும், மாணவ மாணாவிகள் தங்களுக்குள் கிண்டல் செய்வதாகவும், பள்ளி வளாகத்தில் சில மாணவர்களின் ஒத்துழைப்புடன் கஞ்சா விற்பனையும் ஜோராக நடந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  இந்நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவும் கூடாது, திட்டவும் கூடாது என்றால் எப்படித்தான் இவர்களை திருத்துவது என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

  சமீபத்தில் இதே பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 1 மாணவன் பஸ் கண்ணாடியை உடைத்தது குறித்து பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசு பள்ளிக்கூட மாணவர்கள் இது போன்ற சம்பவங்களை பேஷனாக செய்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு பெற்றோர்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 மேற்படி சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று பல மணிநேரம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.