வேற ஒன்னும் இல்ல… அரசியல் பணிகளை தீவிரமாக செய்யச் சொன்னார்! அமித்ஷா தன்னைக் கண்டித்ததற்கு புது விளக்கம் சொன்ன தமிழிசை!

ம.பா.கெஜராஜ்,
அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அமித்ஷா தமக்கு அறிவுரை சொன்னராம். இப்படித்தான் முன்னாள் ஆளுநர் தமிழிசை "எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 12 ஆம் தேதி ஆந்திர பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேடையில் அமித் ஷாவும் வெங்கயா நாயுடுவும் அருகருகே அமர்ந்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விருவிவென்று வந்த தமிழிசை இருவருக்கும் வணக்கம் வைத்தார். அவரை அருகில் அழைத்த அமித் ஷா கோபமாக விரல் நீட்டி ஏதோ பேசினார்.
அதற்கு தமிழிசை விளக்கம் அளிக்க முயன்றும், அதை ஏற்கா அமித்ஷா அவரை எச்சரிப்பது போல சைகை செய்தார்.
தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், கட்சியின் ஐடி விங் நிர்வாகிகளை தமிழிசை அண்மையில் வெளிப்படையாக எச்சரித்து இருந்தார். இந்த சூழலில் உட்கட்சி பூசல் தொடர்பாக அமித் ஷா தமிழிசையை கண்டித்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
மேலும், தமிழிசைக்கு ஆதரவாகவும் பல சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால், இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது பதில் அளிக்காமல் உடனே காரில் கிளம்பிச் சென்றுவிட்டார். இந்த சூழலில் தன்னிடம் அமித்ஷா கூறியது என்ன என்று தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதன்முதலாக நேற்று சந்தித்தேன். தேர்தலில் நான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்பதற்காகவே அமித்ஷா என்னை அழைத்தார்;
நான் விவரித்துக் கொண்டிருந்த போது, நேரமின்மையால் மிகுந்த அக்கறையுடன் அமித்ஷா அவர்கள்
அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார். தேவையில்லாத சர்ச்சைகளையும் யூகங்களையும் தெளிவுபடுத்தவே இந்த விளக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
அக்கா இதை ஏர்போர்டிலேயே தெரிவித்திருக்கலாமே, அதற்கு ஏன் இரண்டு நாள் தாமதம் என்று நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.