வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது! அரசை சாடி மருத்துவர் ராமதாசு காட்டமான அறிக்கை!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது! அரசை சாடி மருத்துவர் ராமதாசு காட்டமான அறிக்கை!

 ம.பா.கெஜராஜ்,

 வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

  நீதிமன்றம் எழுப்பிய ஏழு விணாக்களுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்காததே காரணம் என்று பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு இது தொடர்பாக பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது பற்றின விவரம் வருமாறு,

 கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிகாலத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 இந்த10.5 சதவிகித இடஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க அரசு அளித்தது.

  இந்த உத்தரவை அப்போதைய முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட நிலையில் இதற்கு முக்குலத்தோர் மத்தியில் அதிருப்தி நிலவியதாக பேசப்பட்டது. அதில் ஓ.பி.எஸை மையப்படுத்தியும் விமர்சனங்கள் எழுந்தன.

  சட்டபேரவை தேர்தல் சமயத்தில் தென் மாவட்டங்களில் இது தொடர்பான மாற்றங்கள் எதிரொலித்ததாக கூறப்பட்டது.

  இந்நிலையில் மேற்படி உத்தரவால் பா.ம.க.தலைவர் மருத்துவர் ச.ராமதாசுவை வன்னியர்கள் தலைமீது தூக்கி வைத்து கொண்டாடினர். வன்னிய சமூக அமைப்பு கூடாரங்களும் கலைகட்டியது.

 இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மேற்படி 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிப்பதில் தி.மு.க அரசு தாமதம் செய்வதாக குற்றம் குறைகள் கூறப்பட்ட நிலையில், அதை உறுதிபடுத்தும் விதமாக அறிக்கையெல்லாம் வெளியிட்டு கடுமைகாட்டினார். 

 இடஒதுக்கீடு தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அரசாணையை வெளியிட்டது.

 ஆனால் மேற்படி இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

 இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ''சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' எனக் கேள்வியெழுப்பினர்.

  ''சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது'' எனத் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறியிருக்கிறார்.

 

மருத்துவர் ச.ராமதாசு அறிக்கை

  நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசு, ''வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.''

 ''தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இடஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது''   

 ''தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறையாவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இதே வாதங்களைத்தான் சமூகநீதிக்கு எதிரான சக்திகள் முன்வைத்தன.

 ஆனால், அந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

  69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.

    ஆனால், இப்போது உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு. வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்,''

''பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், பிற பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர்களின் நலன்களையும் சமூகநீதியையும் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.