அ.தி.மு.க. முக்கியஸ்தர்களை சமரம் செய்த மோடி! சசிகலா பற்றியும் பேச்சு!! சென்னை விமான நிலையத்தில் நடந்த சந்திப்பில் பரபரப்பு!!

அ.தி.மு.க. முக்கியஸ்தர்களை சமரம் செய்த மோடி! சசிகலா பற்றியும் பேச்சு!! சென்னை விமான நிலையத்தில் நடந்த சந்திப்பில் பரபரப்பு!!

ம.பா.கெஜராஜ்,

 பாரத பிரதமர் மோடி அவர்கள் அரசு விழாவில் கலந்துக் கொள்ள 26 ஆம் தேதி சென்னை வந்திருந்த போதிலும், ரிட்டர்ன் ஆகும் போது சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க.வின் ஐந்து முக்கியஸ்தர்களை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார்.

  விமான நிலையத்தில் மோடியை சந்திக்க 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

  அந்த முப்பது பேரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேர் அடக்கம்.

 விவிஐபி அறையில் பிரதமர் மோடி  இவர்களை சந்தித்து பேசினார்.

 இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவே அமைந்ததாக பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா இடம்பெற்று இருப்பதால்  பிரதமர் மோடியும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் சந்தித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் கூட்டணியின் பலவீனம் என்பதை இச் சந்திப்பின் போது பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

   2024-ம் ஆண்டு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்போதே பணியாற்ற வேண்டும். இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி 'உங்களுக்குள் இருக்கும் மனக்குறைகளை மனம் விட்டு பேசி தீருங்கள். இருவரும் இணைந்து செயல்படுங்கள். அதுதான் அ.தி.மு.க. எதிர்காலத்துக்கு நல்லது' என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

   தலைமை மீது நம்பிக்கை வராவிட்டால் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள். மக்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

 இந்த ஆலோசனையின் போது சசிகலா பிரச்சினையும் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அந்த 10 நிமிடமும் அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்வதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. பிறகு பிரதமர் மோடியிடம் அ.தி.மு.க. தலைவர்கள் விடைபெற்று சென்றார்கள்.

  ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷமும் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில்  பிரதமர் மோடி சமரச முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.