மலேஷியாவில் சிலம்பம் விருது பெற்ற மருதர் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி!

மலேஷியாவில் சிலம்பம் விருது பெற்ற மருதர் கேசரி ஜெயின் கல்லூரி மாணவி!

நூ.அ.பிலால்.

  வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவி சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் கம்பு சண்டை போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை.

சாதனை படைத்த மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா.

   மலேசியா நாட்டில் கடந்த 30ஆம் தேதி சர்வதேச அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, ஷ்ரீலங்கா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

  இதில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவி ஏ.சினேகா கலந்து கொண்டு சர்வதேச சிலம்பம் கம்பு சண்டை போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

  சாதனை படைத்த மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் கவுரவிக்கும் நிகழ்ச்சி கல்லூரி சுவாமி விவேகானந்தா உள்ளரங்கத்தில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு கல்லூரி இணைத்தலைவர் சி.லிக்மி சந்த் ஜெயின் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் வி.திலீப் குமார் ஜெயின், கல்லூரி முதல்வர் முனைவர் எம்.இன்பவள்ளி, கல்லூரி கல்வி ஆலோசகர் பேராசிரியர் டி. பாலசுப்பிரமணியன், கல்லூரி தலைமை நிர்வாக அலுவலர் சக்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவி என்.தன்சீலா ஃபாத்திமா அனைவரையும் வரவேற்றார்.

   நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜெயின் சங்கத்தின் தேசிய தலைவர் ஷ்ரீ ராஜேந்திரா லுங்கர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து கல்லூரி இணைத்தலைவர் சி.லிக்மி சந்த் ஜெயின் மாணவிக்கு பரிசாக தங்க மோதிரம் வழங்கியும், மூன்றாம் ஆண்டு கல்லூரி கல்வி முழு கட்டணம் மற்றும் மேற்படிப்பு கல்வி முழு கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.

  முன்னதாக மாணவி சினேகாவுக்கு கல்லூரி நுழைவாயில் கல்லூரி முதல்வர் எம்.இன்பவள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சந்தன மாலை அணிவித்தும், கல்லூரி மாணவிகள் மேளதாளங்களுடன் நடனமாடியபடி சிறப்பான வரவேற்பு அளித்து மாணவியை மேடை வரை அழைத்து சென்றனர்.

  நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவி எஸ்.சுவாதிகா நன்றி கூறினார்.