ஏற்கனவே அறிவித்த 1000-ம் ப்ளஸ் 500 ஆசிரியர்கள் நியமனம்!

உ.சசிகுமார்,
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அதற்கான அறிவிப்பாணையை கூட வெளியிடவில்லை.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் கூடுதலாக 500 பேரை நியமித்துக்கொள்ள அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்க கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலனை செய்தபிறகு, 2023-24-ம் கல்வி ஆண்டில் கண்டறியப்பட்ட 8,643 எண்ணிக்கையிலான காலி இடங்களில் 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது.
அதற்கு முன்பாக, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிககாலி இடங்கள் உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்யவேண்டும்.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோரை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதே போல் 'டெட்' முதல் தாள் தேர்ச்சி பெற்ற சுமார் 48 ஆயிரம் பட்டதாரிகள் இந்த பணிக்காக காத்திருக்கின்றனர். ஆகவே இடைநிலை ஆசிரியர் பணிநியமன போட்டி தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.