முதலமைச்சர் திறந்துவைத்த 3 நாட்களில் பல்லை இளித்த ஊராட்சி மன்ற கட்டிடம்!

ம.டெல்லிராஜன்,
முதலமைச்சர் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பல்லை இளித்தது.
தஞ்சாவூரில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் வட்டம் சூரியனார்கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
அப்படியிருக்க சூரியனார்கோவிலில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலிருந்த பொருட்கள் மற்றும் கோப்புகளை புதிய கட்டிடத்துக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, புதிய கட்டிடத்தின் ஒரு அறையில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.
இதுகுறித்து திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். சேதமடைந்த மேற்கூரை விரைவில் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதிவாசிகள் கூறுகையில் கடந்த 14-ம் தேதியே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் இரு 2 அறைகளில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இது வெளியில் தெரிந்தால் சர்ச்சையாகிவிடும் என்பதால், ஊராட்சி மன்ற ஊழியர்கள், அலுவலக கதவை தாழிட்டுக் கொண்டு, அவசரகதியில் சீரமைப்புப் பணிகளை செய்தனர்.
கடந்த 16-ம் தேதி இந்த அலுவலகத்தை முதல்வர் காணொலியில் திறந்து வைத்த நிலையில் நேற்று மற்றொரு அறையின் மேற்கூரையில் இருந்த சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், யாரும் பார்வையிட வரவில்லை.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன்யின் தொகுதியில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் 3 அறைகளில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் 2 முறை பெயர்ந்து விழுந்துள்ளது என்கிறார்கள்.
மேற்கூரை பெயர்ந்து விழுந்து விட்டது. என்ன செய்யவது? பார்த்து சரி பண்ணிவிடலாம் என்கிறார் சம்மந்தப்பட்ட அதிகாரி.