ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

உ.சசிக்குமார்,
நேற்று அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காய்கனிகளின் விலையேற்றத்தைக் கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, "தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்" என பேசினார்.
இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் கவனித்து, அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். இதையடுத்து சுதாரித்த திண்டுக்கல் சீனிவாசன் தவறை திருத்தி பேசினார். "அய்யயோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது. ஸ்டாலினை தோற்கடித்து எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் ஆக்கி காட்டுவோம் என நமது தாய்மார்கள் தெரிவித்திருக்கிறார்கள்" என்று வழிந்தார் திண்டுக்கல் சீனிவாசன்.