தன் மகனுக்கு திருச்சியில் சீட்டு தராததால் நேரு வெறுப்பை காட்டுகிறாரா? செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்! கதறி அழுது பேசிய துரை வைகோ!!

தன் மகனுக்கு திருச்சியில் சீட்டு தராததால் நேரு வெறுப்பை காட்டுகிறாரா? செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்! கதறி அழுது பேசிய துரை வைகோ!!

ம.பா.கெஜராஜ்,

 திருச்சி மக்களவை தொகுதியை தனது மகன் அருணுக்கு பெற தலைமையிடம் முட்டி மோதி பார்த்தார் அமைச்சர் நேரு. ஆனால் அவருக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அருண்நேரு பெரம்பலூரில் வேட்புமனு தாக்கலும் செய்துவிட்டார். அதே நேரத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் மதிமுக வுக்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

 தமது சொந்த தொகுதியில் மகனுக்கு சீட்டு கிடைக்கவிடாமல் அதை மதிமுக தட்டி பறித்துவிட்டதாக நேரு கருதுகிறார். நேருவின் செயல்கள் மூலம் இதை அறிய முடிந்தது.

 இந்நிலையில் தான் திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக, மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய துரை வைகோ கதறி அழுதபடி தனது வேதனையை வெளிக்காட்டினார்.

 அப்போது அவர் பேசுகையில், இரன்டு மூன்று நாட்களாக நான் அமைச்சர் நேருவை சுற்றி சுற்றி வருகிறேன். அவர் பிடி கொடுத்து பேசவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டே இருக்கிறார்.

 திருச்சியை பொறுத்தவரை அவர்தான் சிவன் சக்தி. அவரிடம் கேட்டுதான் இங்கு எதுவுமே நடக்கும். இந்த மேடையில் தான் அவர் சிரித்தார். 

"எங்கள் அப்பாவுக்கு தலை குனிவு ஏற்படக்கூடாது என்று நான் அரசியலுக்கு வந்தேன். கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் சாத்தூர் தொகுதி கேட்ட போது தளபதி மு.க.ஸ்டாலின் வைகோ பையன் கேட்குறாரு, உடனே மாற்றிக்கொடுங்கன்னு சொன்னார். அப்போ கோவில்பட்டியை மாற்றி சாத்தூர் கொடுத்தாங்க. அதை வாங்கி நான் ரகுராம் என்ற சகோதரருக்கு கொடுத்தேன்.

 இப்போகூட எங்கள் நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அத்தனை பேரும் சொன்னாங்க. ஆனால் நான் ஏழெட்டு பேரை பட்டியலிட்டு சொன்னேன், இவர்களில் யாருக்காவது சீட் கொடுங்கள், நான் வேலை பார்க்கிறேன் என்று சொன்னேன். எனக்கு விருப்பம் கிடையாதுன்னு சொன்னேன். எம்.பி.தேர்தலிலும் எனக்கு வேட்கை கிடையாது.

  எங்க அப்பாவுக்காக, கட்சிக்காரர்களுக்காக, முப்பது வருசம் உழைச்சு, உழைச்சு தேஞ்சுட்டாங்க,

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எந்த சின்னத்தில் போட்டியிடுவீங்க என்று கேள்வியெழுப்பினார்., அதற்கு துரை வைகோசின்னமா, செத்தாலும் எங்க சின்னம் தான். எங்கள் சின்னத்தில் தான் நிற்போம். நான் சுயமரியாதைக்காரன். அறிஞர் அண்ணாவின் கட்சி திமுக, டாக்டர் கலைஞர் கட்சி திமுக, எங்க அப்பாவும் திமுகவுல தான் இருந்தார்.

   திமுகவை உயிராய் நேசித்தார், இதே உதயசூரியன் சின்னத்துல தான் எங்க ஐயாவும் போட்டியிட்டார். நாங்களும் கலைஞரை உயிரா நேசிக்கிறோம், திமுகவை உயிரா நேசிக்கிறோம், உதய சூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

   இன்னொரு சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம். இல்லைன்னா நீங்க ஒரு வேட்பாளர் நிறுத்துங்க, நாங்க உங்களுக்காக 40 தொகுதிகளிலும் வேலை பார்க்கிறோம், நாங்க சின்ன கட்சி தான், பெரிய சக்தி கிடையாது. ஆனால் நாங்கள் போட்டியிட்டால் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இல்லை என்றால் திராவிடர் கழகம் போல் இயக்க அரசியல் செய்துவிட்டு போவோம்" என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அப்போது மேடையில் அழுதார்.

  அவரது பேச்சை கேட்டு அரங்கமே கப்சிப் ஆகிவிட்டது. அதே நேரத்தில் பக்கதில் உட்கார்ந்திருந்த கே.என்.நேரு நிமிர்ந்து கூட பார்க்காமல் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்.

 நேருவின் மகனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பெரம்பலூரில்  பா.ஜ.க. கூட்டணி சார்பில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அங்கு பண மழைக்கு பஞ்சமே இருக்காது. மேலும் பாரிவேந்தர் அந்த தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாகவும் உள்ளார். தொகுதி மக்களுக்காக அவர் ஏகப்பட்ட நன்மைகளை செய்துள்ளார்.

  ஆகவே அவரை எதிர்த்து நம் மகன் வெற்றி பெறுவாரா? அதற்காக ரொம்ப விரயம் செய்ய வேண்டியிருக்குமே என்கிற எண்ணத்தில் தான் நேரு துரை வைகோவை வெறுப்புடன் நடத்துகின்றாராம்.

 முன்னதாக திருச்சி திமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரவன் பேசும் போது கூட துரை வைகோ அவர்கள் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் நாங்கள் அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என்று முழங்கினார்.

  அப்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை என்றால் ...? என்ன செய்வார்கள் என்பதை உணர்ந்தே துரை வைகோ மேடையில் அவரது ரியாக்ஷனை வெளிகாட்டிவிட்டார்.

  இந்த பிரச்சனை குறித்து, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்துவதை தலைமை ஒரு போதும் விரும்பாது. ஆகவே நேருவுக்கு அவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ?