யப்பா.... உங்க பிரச்சாரம் போர் அடிக்குது பா...திமுக வை கிண்டலடித்த எடப்பாடி பழனிச்சாமி! பா.ஜ.க.வைப்பற்றி வாயை திறக்கவில்லை!

உ.சசிகுமார்,
அதிமுக சற்று தாமதமாக பிரச்சாரத்தை துவக்கினாலும் கூட, அதனால் தேர்தல் களம் பரபரப்பை எட்டியிருக்கின்றன. காலையில் சேலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி மாலை திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 32 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. மேலும், புதுச்சேரியிலும் தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் திருச்சியில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிண்டலடித்தார்.
திமுகவுக்கு நான் ஒரு அட்வைஸ் செய்ய விரும்புகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதை சொல்ல வேண்டியது நம் கடமை. தேர்தல் பிரச்சாரம் என்றால் ஒரு சுவாரஸ்யமும், அனலும் இருக்கணும். ஆனால், திமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு போனாலே போர் அடிக்குதுனு மக்கள் சொல்றாங்க. என்னடானு கேட்டால், நம்ம அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதுக்கெடுத்தாலும் ஒரு செங்கல்லை தூக்கிட்டு பிரச்சாரத்துக்கு வந்து விடுகிறாராம். 2021-ல் தூக்குன செங்கலை இன்னும் கீழே வைக்க மாட்டேங்குறாரு.
மூணு வருஷமா ஒரே செங்கலை காட்டிட்டு இருக்கியே. பார்த்து பார்த்து போர் அடிக்குதுய்யா, ஸ்கிரிப்ட்டை மாத்துய்யா. கதையை மாத்து. ரோடு ரோடா போய் செங்கல்லை காட்டுறியே? உன் கட்சிக்காரர்கள் 38 பேரை நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வெச்சாங்களே அந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போய் இந்த செங்கல்லை காண்பித்திருக்க வேண்டியது தானே.
அதற்கு தில்லு, திராணி இல்லாம ரோட்டுல வந்து செங்கல்லை காமிச்சிட்டு இருக்கிங்களே. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நாடாளுமன்றத்தில் பெஞ்சை தேச்சிட்டு இருந்துவிட்டு, இப்போ வந்து செங்கல்லை காட்டுறாராம்.
நீட் நீட் என்று திமுக அலறுகிறதே, நீட் தேர்வால் மாணவர்கள் இறக்கிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறதே.. அந்த நீட் தேர்வு யாருடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது? மத்தியில் காங்கிரஸ் - திமுக ஆட்சி இருந்த போதுதானே இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
உனக்கு (திமுக) மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அன்றைக்கே நீட்டை எதிர்க்க வேண்டியது தானே? உனக்கு (உதயநிதி ஸ்டாலின்) தைரியமிருந்தால், வா மேடைக்கு. நீயும் மைக்கை பிடி. நானும் மைக்கை பிடிக்கிறேன். பேசுவோமோ? நீட்டை பற்றி பேச உனக்கு திராணி இருக்கிறதா? நீ என்ன சொன்னாலும் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன முட்டாளா?
போட்டி என்று வந்துவிட்டால் அதிமுக, திமுக இடையே தான் என்பதை இந்த நாடு அறியும். தமிழக மக்களும் அறிவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவரையும் நாம் வெற்றி பெற செய்ய வேண்டும். எறும்பை போல, தேனீயை போல சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று பேசினார்
ஆனால் பாஜகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்ட நிலையில், சமீபத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அடுத்தடுத்து மாஜிக்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரெய்டுக்கு அஞ்சி எடப்பாடி பாஜகவை விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.