மாநகராட்சி ஊழியர்கள் குப்பை கொட்டினால் லாரிகளை சிறைபிடியுங்கள்! அமைச்சர் துரைமுருகன் பர்மிஷன்!

மாநகராட்சி ஊழியர்கள் குப்பை கொட்டினால் லாரிகளை சிறைபிடியுங்கள்! அமைச்சர் துரைமுருகன் பர்மிஷன்!

 ஜி.கே.சேகரன்,

நீர் நிலைகளில் குப்பை கொட்டுவது யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும், மாநகராட்சி ஊழியர்களே கொட்டினாலும் மக்கள் நீங்கள் லாரிகளை சிறைபிடியுங்கள் கடந்த அதிமுக ஆட்சியில்  600 ஏரிகளை தூர்வாரினார்கள் என்று கூறினார்கள் ஆனால் பணம் மட்டுமே செலவானது தூர்வாராமல் ஏமாற்றிவிட்டார்கள் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

 வேலூர் மாவட்டம், காட்பாடி. கழிஞ்சூர் ஏரிக்கரை அருகில் வேலூர், இராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெறவுள்ள எட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.

 இந்த விழா மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடந்தது.

 இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி வைத்து, கழிஞ்சூர் ஏரி சுற்றுலாதளமாக மாற்றப்படுவதற்கான பூமி பூஜையையும் துவங்கி வைத்தார்.

   இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,அமுலு,ஈஸ்வரப்பன் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

   இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசுகையில் நீர் வளத்துறையின் சார்பில் பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், பொதுமக்கள் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

 ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் யார் குப்பை கொட்டினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்.

 குறிப்பாக இந்த பகுதியில் மாநகராட்சி குப்பைகளை ஏரியில் கொட்டுகிறார்கள், அவ்வாறு மாநகராட்சி லாரிகள் வந்தால் பொதுமக்கள் சிறை பிடியுங்கள். எனக்கு தகவல் தெரிவியுங்கள்.

  கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது முதலில் 300 ஏரிகளும் மீண்டும் 300 ஏரிகளும் மொத்தம் 600 ஏரிகள் தூர்வாரியதாக கணக்கு காட்டி பணத்தை எடுத்து சென்றுவிட்டனர்.

 பட்டியலை கேட்டால் இன்றுவரையில் ஏரிகளின் பட்டியலை அவர்கள் தரவில்லை.

 சதுப்பேரி ஏரியும் சுற்றுலாதளமாக மாற்ற இந்த நிதி ஆண்டு நிதி ஒதுக்கபடும். மேல் அரசம்பட்டு அணை கட்ட விரைவில் அடிக்கல் நாட்டபடும்.

  பத்திரப்பள்ளி அணை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள இருந்தாலும் அந்த அணையையும் கட்ட முயற்சிகளை செய்வேன்.

 கழிஞ்சூர் ஏரி சுற்றுலாதளமாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

 ஏரி கரையில் உள்ள மக்களுக்கு மாற்று இடங்களை ஒருவாரகாலத்தில் வழங்கி அந்த பணிகளும் தடையில்லாமல் நடைபெறும், சேண்பாக்கம் தண்டலம் கிருஷ்ணாபுரம் இடையே தரைப்பாலம் அமைக்கபடும் என்று பேசினார்.