முதல்வரையும் கவர்னரையும் ஏர்போர்ட் வரவேண்டாம் என்று நான் தான் சொன்னேன்! மோடி!!

ம.பா.கெஜராஜ்,
சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி பெங்களூர் வந்துள்ளார்.
கிரீஸ் நாட்டின் சுற்றுப் பணத்தை முடித்துக் கொண்டு ஏதென்ஸில் இருந்து நேற்று புறப்பட்ட அவர் நேராக பெங்களூரு வந்தடைந்தார்.
பெங்களூர் வந்த பிரதமர் மோடியை காண பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்தனர்.
விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்க கவர்னர், முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் மட்டும் வரவேற்றார். மோடியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- அதிகாலையில் என்னை பார்ப்பதற்காக கூடியிருக்கிறீர்கள். ஏதென்ஸில் பார்த்ததை போன்று இங்கே பார்க்கிறேன். நான் இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்க்க வந்திருக்கிறேன். அதனால் கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரிடம் என்னை வரவேற்க வரவேண்டாம் எனத் தெரிவித்தேன். முறைப்படி மாநிலத்திற்கு வருகை தரும்போது நடைமுறைப்படி கவர்னர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்க வந்தால் போதுமானது என்று தெரிவித்தேன்.
வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் உடனடியாக நான் இங்கு வரமுடியவில்லை. அதனால்தான் நாடு திரும்பியதும் உடனே இங்கு வந்துள்ளேன். இஸ்ரோ சாதனையை இன்னும் பெங்களூர் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால்தான் குழந்தைகயுடன் அதிகாலையிலேயே இங்கே வந்திருக்கிறீர்கள் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.