ஏ.சி.சண்முகத்துக்கு இதய அறுவை சிகிச்சை! நலமுடன்  உள்ளார் என மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு!

ஏ.சி.சண்முகத்துக்கு இதய அறுவை சிகிச்சை!  நலமுடன்  உள்ளார் என மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு!

ம.பா.கெஜராஜ்,

  வேலூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

 நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், வேலூர் தொகுதியில்  புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 3,52,990 வாக்குகள் பெற்றார் .

  தமிழகத்தில்  பாஜக சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்களில் பலர் டெபாசிட் இழந்த நிலையில் ஏ.சி.சண்முகம் திமுக வேட்பாளரிடம் போட்டியிட்டு மெகா வாக்குகள் பெற்றார்.

தேர்தல் சமயத்தில் வாரணாசி தொகுதியில் மோடி வேட்பு மனுதாக்கல் செய்த போது அங்கு நேரில் சென்று பணியாற்றினார். அதே போல் தேர்தலுக்கு பின்ன மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய அவையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.

 இந்நிலையில், ஏ.சி.சண்முகம் உடல் நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "புதிய நீதிக் கட்சியின் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.