இயற்கை குணம் கொண்ட பாய் முடைபவர்களின் கஷ்ட காலம்!!

கு.அசோக்,

 சோளிங்கர் அருகே பாரம்பரிய மிக்க ஈச்ச ஓலை பாய் பின்னும் பைரவ மக்கள் போதிய வருமானமின்றி தவிக்கும் அவலம்.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே பைரவ காலனி உள்ளது. இந்த காலணியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அவர்கள் பாரம்பரியமிக்க ஈச்ச ஓலை பாய் பின்னும் தொழிலை செய்து வருகிறார்கள்.

 ஆதியில் பாறைகள் மீதும் புற்கள் மீதும் படுத்து உறங்கிய அவர்கள் மக்கள் நாளடைவில் ஈச்சம் ஓலை பாய் பயன்படுத்தி வந்தனர்.

 அதற்குப்பின் கோரை பாய் பயன்படுத்தி வந்தார்கள். நாளடைவில் ஈச்சம் மரமும் கோரைகளும் விளைச்சல் குறைந்து போனது.

   மாற்றாக உருவெடுத்ததுதான் பிளாஸ்டிக் பாய். விதவிதமான வண்ணங்களில் பிளாஸ்டிக் பாய் சந்தையில் உள்ளன.

  இருந்தாலும் கூட பாரம்பரியமிக்க இந்த ஈச்சம் பாய் தொழிலை செய்து வரும் பைரவ மக்கள் நாள்தோறும் விவசாய நிலங்களிலும் மலைகள் காடுகள் என திரிந்து ஈச்ச  ஓலைகளை அறுத்து வந்து அதை காய வைத்து பின்னர் ஊறவைத்து மறுபடியும் உலர்த்தி ஓரளவுக்கு சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

 இதில் ஒரு சிரமம் யாதெனில் ஒரு பாய் முழுமையடைய ஐந்து நாட்களாகிற.து இந்த ஐந்து நாட்களாக உழைத்து ஒரு ஈச்ச ஓலை பாய் உருவாக்கி விற்பனைக்கு போகும் போது மக்கள் அதில் பேரம் பேசி மனதை புண்படுத்துகிறார்கள்.

  அதற்கு தோதாக  ஈச்ச ஓலை பாய் இப்பொழுது யாரும் பயன்படுத்துவது கிடையாது, இந்தப் பாய் சவத்தை அடக்கம் செய்வதற்கும் புகையிலை மடிப்பதற்கும் புலி உளர்த்துவதற்கும்தான் பயன்படுகிறது என்று கூறி வேறு வழியின்றி நூறு ரூபாய்க்கு  என விற்கிறார்கள்.

 இருப்பினும், அந்தப் பாயின் மகத்துவம் தெரிந்த மக்களுக்கு 500 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.  

 இந்த மக்கள் ஐந்து நாள் வேலை செய்து ஒரு பாய் உருவாக்கினால் இவருடைய மொத்த லாபம் 100 ரூபாய் மட்டுமே இதே மக்கள் விவசாய கூலிக்கு சென்றால் கூட ஒருவேளை உணவுடன் 200 ரூபாய் கூலி கிடைக்கிறது.

 ஐந்து நாளைக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது ஆனால் இந்த மக்கள் வேறு தொழில் தெரியாததால் இந்த ஈச்சம் ஓலை பாயை மட்டுமே முடைந்து பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

 மாதம் 500 முதல் 600 ரூபாய் சம்பாதித்து இந்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாமலும் குழந்தைகளுக்கு மருத்துவ செலவிற்கு கல்வி செலவு கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகி வருகிறது.

  ஆகவே இயற்கை குணங்கள் கொண்ட கோரை மற்றும் ஈச்சம் பாயை மக்கள் பயன்படுத்தி உடல் நலத்தை காத்துக் கொள்வதுடன் பைரவ மக்களுக்கு வாழ்க்கையும் கொடுக்கலாமே.

 வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க தெரிந்த அரசுக்கு, இயற்கை மருத்துவ குணம் கொண்ட இது போன்ற தொழில்களை மேம்படுத்த தெரியவில்லையே?