டிரான்ஸ்பார்மரை மாற்ற ஊர்மக்களிடம் 10,000/- லஞ்சம் கேட்ட மின்சார அதிகாரிகள்! சாலை மறியலால் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,
பழுதான டிரான்ஸ்பார்மை சரி செய்ய ரூ.0,000பணம் கொடுக்க ஊர் பொதுமக்கள் மறுத்ததால் 15 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் அரசு பேருந்தை சிறைபிடித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையனூர் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சார துறையினருக்கு அப்பகுதிமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத் துறையினர் டிரான்ஸ்பார்ம் பழுதடைந்துள்ளதாகவும் அதை சரி செய்வதற்காக 10000 ரூபாய் பணத்தை ஊர்பொதுமக்கள் வழங்க வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு ஊர் பொதுமக்கள் பணம் கொடுக்க மறுத்ததாகவும் தெரிகிரது. மேளும் இதன் காரணமாக 15 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் வழங்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மின்சாரம் இல்லாமலும் குடிநீர் இல்லாமலும் அவதிப்பட்டு வருவதாக கூறும் நிலையில், செவ்வாய் அன்று காலை திருப்பத்தூரிலிருந்து ஜடையனூர் செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரிசிலாப்பட்டு போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக வந்து இதற்கான தீர்வை காண வேண்டும் எனக்கூறி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து ஜலகாம்பாறை செல்வதற்காக அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.
அதனைதொடர்ந்து உதவி பொறியாளர் நித்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டபோது, டிரான்ஸ்பார்ம் சரி செய்வதற்கு ஊர் பொதுமக்கள் எதற்காக 10,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என உதவி பொறியாளர் நித்யா வாக்குறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இதன் காரணமாக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.