அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே கடும் வாக்குவாதம்! பல மணி நேரம் ஸ்தம்பித்த தேர்தல் அலுவலகம்!!

அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே கடும் வாக்குவாதம்! பல மணி நேரம் ஸ்தம்பித்த தேர்தல் அலுவலகம்!!

Ma.ba.Gajaraj,

வடசென்னையில் அதிமுக வேட்பாளரும் திமுக வேட்பாளரும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வடசென்னையில் அதிமுக சார்பாக ராயபுரம் மனோ என்பவர் வேட்பாளராக உள்ளார். அவர் இன்று மின்ட் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்திருந்தார்.

அதேபோல் திமுக வேட்பாளராக சீட்டிங் எம் பி கலாநிதி வீரசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது தேர்தல் அதிகாரி திமுக வேட்பாளரிடம் முதலில் வேட்பு மனுவை பெறக் கூடாது, நாங்கள் தான் முதலில் டோக்கன் வாங்கி வந்திருக்கிறோம் எங்கள் வேட்பாளருடைய மனுவை தான் முதலில் பெற வேண்டும் என்று அதிமுக தரப்பு கோரிக்கை வைத்தது.

இதை ஏற்க மறுத்த திமுக தரப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

எனவே தேர்தல் அதிகாரி அங்கு பணியில் இருந்த காவலர்களை அழைத்து முதலில் யார் டோக்கன் வாங்கியது என்கின்ற விவரங்களை ரிஜிஸ்டரில். சரி பார்த்தார்.

அதில் அதிமுக வேட்பாளர் தான் முதலில் டோக்கன் பெற்றிருந்தார்..

எனவே அவரது வேட்பு மனு தான் முதலில் ஏற்பேன் என்று அதிகாரி கூறினார். ஆனால் இதற்கு திமுக தரப்பினர் ஒத்து வரவில்லை.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது மணிக்கணக்கில் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.

தேர்தல் அதிகாரி மேல் அதிகாரிகளுக்கு எல்லாம் போன் செய்து விவரங்களை தெரிவித்த போதும் இருவரும் சமாதானம் அடையவில்லை.

இந்நிலையில் பாஜக வேட்பாளரும் மனுதாக்கல் செய்ய அங்கு வந்தார்.

ஆனால் அங்கு ஏற்கனவே அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்ததால் பாஜக வேட்பாளர் வெளியில் காக்க வைக்கப்பட்டார்.

நீண்ட நேரம் காத்திருந்த பாஜக வேட்பாளர் தரப்பினர் பொறுமை இழந்து சத்தம் போட ஆரம்பித்து தேர்தல் அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டனர்.

ஆனால் அவர்களை அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு இருந்த அதிகாரி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மாற்று வேட்பாளரான அவரது மனைவி ஜெயந்தியிடம் முதலில் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்பு மனுவையும், அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின்  மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனால் பல மணி நேரம் நீடித்த குழப்பம் வாக்குவாதம் ரகளை போன்றவை அமைதி முடிவுக்குவந்தன.