ஜெயலலிதாவை "அம்மா", "அம்மா" என குறிப்பிட்ட துரைமுருகன்! திரும்பிப்பார்த்த ஸ்டாலின்!

ஜெயலலிதாவை "அம்மா", "அம்மா" என குறிப்பிட்ட துரைமுருகன்! திரும்பிப்பார்த்த ஸ்டாலின்!

 ம.பா,கெஜராஜ்,

 சட்டபேரவையில் ஜெயலலிதாவை குறிப்பிட்டு "அம்மா", "அம்மா" என அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கையில் அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதிரியாக திரும்பிப்பார்த்தார். காவிரி விவகாரம் தொடர்பான தீர்மானத்தின் மீது பேசிய இப்படி அவர் குறிப்பிட்டதை திமுக எம் .எல் .ஏ.க்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.¢.

 தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி விவகாரம் மீண்டும் டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறது.  தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கொடுக்க மறுத்து கர்நாடகா பிடிவாக உள்ளது.  இதனால் இரு மாநிலங்களிலும்  போராட்டங்கள் நடந்து வருகின்றன. அப்படியிருக்க காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

 

 இந்த தீர்மானம் தொடர்பாக திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக உறுப்பினர்களுக்கு பதில் கொடுத்து பேசினார். அப்போது அவர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசியது தான் அதிமுகவினரையே வியப்பில் ஆழ்த்தியது.

 

  அவர் பேசும் போது, "காவிரி விவகாரத்தில் அழுத்தம் கொடுங்க, அழுத்தம்கொடுங்கனு நம்ம எதிர்க்கட்சித் தலைவர் சொல்றாரு. அழுத்தம் கொடுத்த மட்டும் நடந்துரும்னு நினைக்கிறீங்களா சார்? முடியாது. மாண்புமிகு அம்மா அவர்கள், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை அரசிதழில் போடணும்னு சொன்னாங்க. ஆனால் மத்திய அரசு போடல. உடனே, அம்மா இங்கேயே உண்ணாவிரதம் இருந்தாங்க. ஆனா ஒன்னும் நடக்கல. அவ்ளோ பெரிய முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்து அழுத்தம் கொடுத்த, டெல்லி அசையலையே. இப்போ நாங்க அழுத்தம் கொடுத்தா மட்டும் நடந்துருமா?" எனக் கேள்வியெழுப்பினார்.

  அதிமுகவினர் கூறுவது போல  ஜெயலலிதாவை அம்மா, அம்மா  என்று கூறியது திமுகவினரை தர்மசங்கடத்தில் ஆளாக்கியது. துரைமுருகன் இப்படி கூறும் போது முதல்வர் ஸ்டாலின் சட்டென திரும்பி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும், அது தெரியாமல் துரைமுருகன் தனது பேச்சை தொடந்தார்.