மத்திய ரிசர்வ் போலிஸ் பயணிகளை துப்பாக்கி காட்டி மிரட்டினார்களா?

ஜி.கே.சேகரன்,
ரயிலில் ரகளையில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீசாரை கீழே இறக்கக்கோரி பயணிகள் ரெயில் நிலையத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் தாமதமாக சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இதனால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது*
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை,ஈரோடு திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் ரெயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.
இந்நிலையில் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் நேற்று இரவு 10 மணியளவில் கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டது.
அப்போது ரெயில் இன்ஜின் முன் பக்கமுள்ள பொது பெட்டியில் கோயம்புத்தூர் மத்திய ரிசர்வ் போலீசார் 10 க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி முடித்துவிட்டு அவர்கள் கோயம்புத்தூருக்கு பயணம் செய்தனர்.
அப்போது ஓடும் ரெயிலில் மத்திய ரிசர்வ் போலீசார் மது அருந்தி கொண்டு ரகளை ஈடுபட்டுள்ளனர். இதனால் சக பயணிகள் அவதிப்பட்டனர். மேலும் கழிவறை அருகே செல்லும் பயணிகள் நீங்கள் இந்த பக்கம் வரக்கூடாது என கூறியுள்ளனர்.
அதே போல் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர். இதனை தட்டி கேட்ட பயணிக்கு மத்திய ரிசர்வ் போலீசார் ஒருவர் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.
இந்த சூழலில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து சக பயணிகள் அனைவரும் கிழே இறங்கி மது போதையில் ரகளை ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீசாரை இறக்க வேண்டும் எனவும் அவர்கள் பயணம் செய்யும் ரெயிலில் நாங்கள் பயணம் செய்யமாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மத்திய ரிசர்வ் போலீசார் பயணம் செய்யும் ரெயிலில் நாங்கள் பயணம் செய்யமாட்டோம் அவர்கள் இறக்கினால் தான் நாங்கள் இந்த ரெயிலில் பயணம் செய்வோம் என பயணிகள் கூறியதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் மத்திய ரிசர்வ் போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அனைவரையும் கிழே இறங்கினர்.
அதன் பிறகு மாற்று ரெயில் மூலம் பின்னால் வந்த ஹைதராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டது.