ஜனநாயக கடமையாற்ற அழைக்கிறார் ஆட்சியர் காயத்ரி!

ஜனநாயக கடமையாற்ற அழைக்கிறார் ஆட்சியர் காயத்ரி!

க.பாலகுரு,

திருவாரூரில் 13வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட ஆட்சியர் காயத்ரி தொடங்கி வைத்தார்.

  திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் 13வது தேசிய வாக்காளர் தினம்-2023ஐ முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட  விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி,இ.ஆ.ப.அவர்கள்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக  அண்ணா சாலை வரை சென்று தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

  தொடர்ந்து திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் தேசிய வாக்காளர் தினத்தினையொட்டி நடைபெற்ற ரங்கோலி போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், சுவரொட்டி வரைதல் போட்டி, பாட்டுப்போட்டி, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், நேரு யுவகேந்திரா மூலம் தையல் கலைகள் பயின்றதற்கான 75 நபர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

  மேலும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்காளராக கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு 18 வயது நிரம்பியவர்களும் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்வதுடன் தங்களது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் நக்கீரன், முதன்மை கல்வி அலுவலர்

விஜயா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.