குளத்தை சுத்தம்:- ஒரு பொதுஜனமும் வரவில்லை! ஆர்.டி.ஓ. வரிந்து கட்டிக்கொண்டு இறங்கினார்!

கோட்டீஸ்வரன்,
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சியில் இடும்பன் குளம் அமைந்துள்ளது. புனித தீர்த்தமாக விளங்கும் இந்த இடும்பன் குளத்தில் பக்தர்கள் புனித நீராடி பழனி கோயிலுக்கு சென்று முருகனை வழிபடுவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இந்த இடும்பன் குளத்தில் உள்ள நீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அப்படியிருக்க பொதுமக்கள் அந்த குளத்தில் பிளாஸ்ட்டிக் மற்றும் துணிகளை வீசிவிட்டு செல்கிறார்கள்.
போதாகுறைக்கு சமூகவிரோதிகள் மது அறுந்திவிட்டு வீசும் பாட்டில்களாலும் இடும்பன்குளமானது மாசடைந்து உள்ளது.எனவே இடும்பன் குளத்தை சுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார்.
இடும்பன் குளத்தை சுத்தம் செய்து கழிவுகளையும் குப்பைகளையும் வெளியேற்ற பழனி வாழ் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவிக்குமாறும் அறிவித்தார்.
அறிவித்தபடி இடும்பன் குளத்தை சுத்தம் செய்யும் பணிக்காக ஆர்.டி.ஒ. சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இடும்பன் குளத்திற்கு வருகைதந்தனர்.
ஆனால் சட்டக் கதை பேசும் பொது ஜனம் எவருமே வரவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தாத கோட்டாட்சியர் சிவக்குமார், வேஷ்டி ஒன்றை வாங்கி வரச்சொல்லி வேஷ்டியை அணிந்து கொண்டு அருகிலிருந்த கம்பை எடுத்துக்கொண்டு அசுத்தமான குளத்தில் இறங்கி குப்பைகளை அகற்றினார்.
தனிஒருவராக குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத வருவாய்த்துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
ஆர்.டி.ஓ.வின் அசாத்திய பணியை குறித்து சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஏராளமானோர் குளத்தை சுத்தம் செய்ய முன்வந்தனர். சிவகிரிப்பட்டி ஊராட்சி தூய்மைபணியாளர்கள், தீயணைப்புவீர்ரகள், பழனி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால் ஆர்.டி.ஒ.சிவக்குமாருக்கு பலதரப்பினரின் பாராட்டு கிடைத்தது.