குடியாத்தம் தபால் அலுவலகத்தில் அதிகாலையில் கூடும் பொதுமக்கள்! கைரேகை பொருத்தம் இல்லாததால் ரேஷன் பொருட்கள் பெருவதில் சிரமம்!
கு.அசோக்,
குடியாத்தம் பகுதியில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற பலருக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. ரேஷன் கடையில் பொருட்களை பெற கைரேகை கருவியில் கட்டை விரலை பதிக்க வேண்டும். அது ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே பொருட்களை பெற முடியும்.
ஆனால் பலருக்கு கைரேகை பொருத்தம் வராததால் வராததால் ரேஷன் பொருட்கள் பெற இயலவில்லை. குறிப்பாக சிறுவயதில் ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தற்போது எழுந்திருக்கிறது. ஆதார் அட்டையை அப்டேட் செய்யாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இது போன்ற அப்டேட் செய்ய செல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டும் பலர் அதை கவனிக்காமல் இருந்துவிட்டதாலேயே கைரேகை பொருந்தவில்லை. வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் பிள்ளைகளின் ஆதார் என்னில் கைரேகையை மீண்டும் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் குடியாத்தம் தலைமை தபால் நிலையத்தில் தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து கூடியதால் அப்பகுதியில் பெரும் பதட்டமும் பொதுமக்கள் அவதிக்கும் உள்ளாகி வருகின்றனர். ஆதார் அட்டை பிடிப்பதற்காக தலைமை தபால் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு நூறு டோக்கன் மட்டுமே வழங்கப்படுவதால் காலை 4 மணி முதல் வரிசையில் நிற்பதற்காக பெற்றோர்களும் குழந்தைகளும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதார் கைரேகை பதிவிறக்கம் செய்வதற்காக கூடுதலாக கிளைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் முகாம்களை தொடர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடியாத்தம் நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ சேவை மையத்திற்கு செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் தபால் நிலையத்தில் அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடியாத்தம் தலைமை தபால் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை மற்றும் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது.