பேர்ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலில் வைக்கபட்டார்! உயரதிகாரிகளிடம் அளித்த புகார் எதிரொலி!?

உ.சசிகுமார்,
பேர்ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மாற்றப்பட்டு அவர் வடக்கு மண்டல ஐஜி அலுவலக காத்திருப்பு பட்டியலில் வைக்கபட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் காவல் உயரதிகாரிகளிடம் ஆளுங்கட்சி கவுன்சிலரின் கணவர் அளித்த புகார் உட்பட பல்வேறு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முத்துகுமார்.
மிகவும் நேர்மையானவர், கள்ளச்சாராயத் தொழிலை அடியோடு ஒழித்தவர்,(அதற்காகவே முந்தைய மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் அவர்களிடம் பாராட்டு சான்று பெற்றவர்), கட்டபஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை ஒடுக்கியவர்.... இப்படியெல்லாம் பெயரெடுத்த அவர் அரசியல் கட்சியின் நகர அளவில் பொறுப்பு வகிப்பவரின் கைப்பாவையாக மாறி, ஆளுங்கட்சி கவுன்சிலரின் கணவர் மீது இரண்டு பொய் வழக்குகளை பதிந்தார்.
அதுமட்டுமின்றி, கவுன்சிலரின் கணவரை கைது செய்வதாக கூறி அவரது வீட்டுக்குள் நுழைவதற்கு முயன்றார். இதனால் பயந்து போன வீட்டிலிருந்த பெண்கள் குழந்தைகள் பின்னர் கதவை திறந்த போது கவுன்சிலரின் மச்சினனை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்.
இந்த தகவல் சக கவுன்சிலர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியவந்த நிலையில் அனைவரும் அங்கு கூடிவிட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இது ஒரு புறம் இருக்க, கவுன்சிலரின் கணவர், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் பெற்றார்.
அதன் பிறகு அவர் கடந்த 18.11.2023 ஆம் தேதி வேலூர் சரக டி.ஜ.ஜி அவர்களிடம் முத்துகுமார் இன்ஸ்பெக்டரை மையப்படுத்தி மனு ஒன்றை அளித்தார்.
அதில், திட்டமிட்டு என் மீது பொய் வழக்கு பதிந்து என்னையும் என் குடும்பத்தாரையும் டார்ச்சர் செய்து வரும் பேர்ணாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும், நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு பதிய வேண்டியிருப்பதால் அதற்கான அனுமதியும் கோரியிருந்தார்.
அந்த புகாருடன், தன் மீது பதியப்பட்டது பொய்வழக்கு தான் என்பதற்கான தகுந்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை பென் டிரைவரில் பதிவு செய்து அளித்தார்.
மேலும் அதில் தம் மீது பொய் வழக்கு பதிவதற்கான காரணம் என்ன எனவும் அதில் தெரிவித்திருந்தார் . குறிப்பாக தம் மீது இரண்டு பொய் வழக்குகள் பதிந்து தன்னையும், தன் குடும்பத்தாரையும் டார்ச்சர் செய்தார் என நடந்த அனைத்து விவரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த புகாரை மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கும் அனுப்பினார். அதில் நடவடிக்கை மற்றும் 3 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆளும் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலில் ஒரு சாரருக்கு உதவி செய்யவதற்காக நகரின் முக்கியஸ்தர் மீது பொய் வழக்கு போட்டதின் பலனாக தற்போது அவர் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை. அப்போது வழிப்பறி வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளார். பின்னாளில் விசாரித்த போது மூதாட்டி கொலையை அவன் தான் செய்தான் என தெரிய வந்திருக்கிறது.
அதே போல் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் மற்றும் கோடிகணக்கில் சூதாட்ட பிசினஸ் எல்லாம் தொடங்கிவிட்டதாம். இதெல்லாம் கூட அவர் மீதான நடவடிக்கைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
எது எப்படியோ ஒரு அரசியல்வாதிக்கு சொம்பு தூக்கியதன் விளைவாக தற்போது இவர் பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு போக வேண்டியது ஆயிற்று.