சந்திரபாபு நாயுடுவுக்கு கைதி எண் '7691'! வேடிக்கை பார்த்த பாஜக!

சந்திரபாபு நாயுடுவுக்கு கைதி எண் '7691'! வேடிக்கை பார்த்த பாஜக!

 ம.பா.கெஜராஜ்,

  ஆந்திர மாநில  முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை அதிகாலை  ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, அவரை கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறையில் அடைப்பதற்காக, விஜயவாடாவில் இருந்து 200 கி.மீ. தூரம் சாலைமார்க்கமாக சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் சென்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 1.20 மணிக்கு போலீஸ் வேன், ராஜமுந்திரி சிறைக்கு சென்றது. சிறைவாயில் வரை சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளருமான நர லோகேஷ், காரில் பின்தொடர்ந்தார்.

 சந்திரபாபு நாயுடுவை அதிகாரிகள் சிறைக்குள் அழைத்துச் சென்றனர். அவரது உயிருக்கான அச்சுறுத்தலை கருதி, தனியாக உள்ள 'சினேகா' என்ற பிளாக்கில் அவரை அடைத்தனர். அவருக்கு '7691' என்ற கைதி எண் ஒதுக்கப்பட்டது. அவருக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு தனி உதவியாளரும், 5 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில் அவருக்கு வீட்டு உணவும், மருந்துகளும் அளிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. எனவே, நேற்று காலை, சந்திரபாபு நாயுடுவை அவருடைய மனைவி புவனேஸ்வரி, மகன் நர லோகேஷ், மருமகள் பிராமினி ஆகியோர் சந்தித்தனர். பால் கலக்காத காபி, பழ சாலட், வெந்நீர் ஆகியவற்றை அளித்தனர்.

   சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டதால், ராஜமுந்திரி சிறையை சுற்றிலும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க 300 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ராஜமுந்திரி நகரில் போலீஸ் சட்டத்தின் 30-வது பிரிவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாயுடு கைதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி நேற்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனாவும், கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க,ஒதுங்கிக்கொண்டது. 

   முழுஅடைப்பை முறியடிப்பதற்காக, தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். கட்சியின் மாநில தலைவர் கே.அச்சாநாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சில மூத்த தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பஸ்கள் ஓடின பல இடங்களில் தெலுங்கு தேசம் தொண்டர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். நரசன்னபேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை எரித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

   ஆந்திரபிரதேச அரசு போக்குவரத்து கழக பஸ்கள், முதலில் இயக்கப்படவில்லை பின்னர், வழக்கம்போல் இயக்கப்பட்டன. தனியார் வாகனங்களும் வழக்கம்போல் ஓடின. அரசு அலுவலகங்கள், அரசு கல்லூரிகள், அரசு பள்ளிகள் எப்போதும் போல் செயல்பட்டன. ஆந்திர பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த கல்லூரிகளும் இயங்கின. சில தனியார் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்து இருந்தன. பொதுத்துறை வங்கிகள், வழக்கம்போல் இயங்கின.