வெடிகுண்டு கலாச்சாரத்தில் சிக்கிய செங்கல்பட்டு! ஊராட்சிமன்ற தலைவரின் மகன் கொலை பதற்றம்!

பா.சுரேஷ்,
சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் வெடிகுண்டு கலாச்சாரமும், கூலிப்படைகளின் ஆதிக்கமும் பெருகிவருகிறது. இந்நிலையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சுடுகாட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வண்டலூர் அருகே கீரப்பாக்கத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கல்யாணி, மகன்கள் அன்புராஜ், அன்பரசு உள்ளனர். அதிமுக சார்பில்ரவி ஏற்கெனவே ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகித்தார். தற்போது அவரது மனைவி கல்யாணி ஊராட்சிமன்ற தலைவராக உள்ளார் மேலும் இதில் 2-வது மகன் அன்பரசு 9-வது வார்டு உறுப்பினராகவும் இருந்தார்.
இந்நிலையில் கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் மகன் நவீன்குமார் என்பவரின் படத்திறப்பு விழாவுக்காக அன்பரசு உட்பட அவரது நண்பர்கள் 7 பேர் சென்றுவிட்டு அங்குள்ள சுடுகாட்டு வாசலில் அமர்ந்து இரவு 10:30 மணியளவில் சரக்கு போட்டுள்ளார்கள்.
ஏற்கனவே அங்கு மறைந்திருந்த ஒரு ரவுடி கும்பல் அன்பரசு வந்த கார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதைக் கண்டதும் மது அருந்திக் கொண்டிருந்த 7 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் ரவுடி கும்பல் அன்பரசை ஓட ஓட விரட்டி வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அன்பரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காயார் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அன்பரசன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவத்தின் புகாரின் பேரில் காயார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அன்பரசை கொலை செய்தது யார், எதற்காக அவரை கொலை செய்தார்கள் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ரவுடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இறந்த அன்பரசு மீது ஏற்கனவே கொலை வழக்கு, துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கு, அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கொலை செய்தவர்களை இதுவரையில் கைது செய்யவில்லை எனக் கூறி இறந்தவரின் தந்தை உட்பட உறவினர்கள், பொதுமக்கள் கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை ரத்தினமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீஸார் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலை மக்கள் கைவிட்டனர்.
இதனிடையே 10 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டில் இப்படி அடிக்கடி கூலிப்படையினரின் கை ஓங்கிவருகிறது. அவர்களை அடக்க போலிசார் பெரும்பாடுபட்டு வருகிறார்கள்.ஸ்