நாய்கள் கடித்த சிறுவன் அபாய கட்டத்தில் உள்ளான்! சிகிச்சைக்கு உதவி செய்யுமா அரசு?

கு.அசோக்,
தெருநாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த சிறுவன் இராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதி - சிகிச்சைக்கு 4 லட்சம் தேவைப்படுவதால் தமிழக அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பம்..
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அடுத்த ஸ்ரீ கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது 2 வயது மகன் வெற்றிவேல். நேற்று முன்தினம் இரவு சுமார் ஒன்பது மணி அளவில் வீட்டிற்கு அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் ஒன்று கூடி வெற்றிவேலை திடீரென கடித்து குதறியுள்ளன.
இதனைக் கண்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தெரு நாய்களை விரட்டியதோடு படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக இராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சைக்கு தேவையான கட்டணத்தை கட்ட முடியாமல் சிறுவனின் குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.
முதற்கட்டமாக நான்கு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் தங்களுக்கு தமிழக அரசு சிகிச்சைக்கு பண உதவி செய்ய வேண்டும் என கோரிக்கையை முன் வைத்ததோடு அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.