ரேஷன் அரிசி கடத்தி சிக்கிய பாஜக பிரமுகர்!

ரேஷன் அரிசி கடத்தி சிக்கிய பாஜக பிரமுகர்!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி,

விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, நேற்று இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் போலீசார் ராஜபாளையம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

   அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 25 மூடை ரேஷன் அரிசி இருந்தது. போலீசார் வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்ததோடு வேனில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.

பா.ஜ.க. பிரமுகர்

வேனில் இருந்த நபர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த சுடலைமணி என்ற மணி (வயது 36) என தெரியவந்தது. இவர் ஏற்கனவே ராஜன் என்ற பெயரில் பலமுறை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, நான் பா.ஜனதா மாநில நிர்வாகி என்றும், குறிப்பிட்ட இடத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும் தகவல் கூறி வந்துள்ளார். ஆனால் அவர் போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக இடத்தை மாற்றி தகவல் சொல்லி வந்ததும் தெரியவந்தது.

நேற்று போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்திய சோதனையில் சுடலைமணி சிக்கி உள்ளார். பா.ஜனதா பிரமுகரான அவர், அக்கட்சியில் மாநில பொறுப்பில் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் ரேஷன் அரிசி கடத்தி வந்த வேனில் இருந்த ஆலங்குளம் தாலுகா ரெட்டியார்பட்டியை சேர்ந்த வரதனும் (21) ?பாலீசாரிடம் சிக்கினார். இவர்கள் இருவரும் ராஜபாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்து சங்கரன்கோவிலில் அரிசி ஆலை நடத்திவரும் செந்தூர்பாண்டிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கைது

இதனைதொடர்ந்து போலீசார் அரிசி ஆலை அதிபர் செந்தூர்பாண்டி, சுடலைமணி மற்றும் வரதன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சுடலைமணியையும், வரதனையும் கைது செய்தனர். செந்தூர்பாண்டியை தேடி வருகின்றனர்.