அய்யா எனக்கும் பொது மன்னிப்பு தாங்களேன்! ராஜிவ் கொலைவழக்கு சாந்தன் ஆளுநருக்கு மனு!

அய்யா எனக்கும் பொது மன்னிப்பு தாங்களேன்! ராஜிவ் கொலைவழக்கு சாந்தன் ஆளுநருக்கு மனு!

ம.பா.கெஜராஜ்,

 அய்யா எனக்கும் பொது மன்னிப்பு தாங்களேன் என்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான சாந்தன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு மனு அனுப்பிவைத்துள்ளார்.

 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. அதனால் இந்த வழக்கில் கைதான மற்ற 6 பேரும் தங்களையும் விடுதலை செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.   

 இந்நிலையில் சாந்தன் தனது விடுதலை தொடர்பாக சிறை நிர்வாகம் மூலம் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார்.

   அந்த கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இலங்கையில் வசித்த எனது தந்தை உயிரிழந்தபோது இறுதிசடங்கிற்கு கூட செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது தாயார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

   தாயாரை கவனிக்கவும், குடும்பத்தை பிரிந்து, அனைத்து ஆசைகளையும் மறந்து சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் எனக்கு குடும்பத்தோடு இணைந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  இந்த தகவலை சிறைத்துறை அலுவலர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.