ஆள் காட்டியால் தப்பிவந்த பிரபல அரிசி கடத்தல் மன்னன் அதிகாரிகளால் கைது!

ம.பா.கெஜராஜ்,
ஒரு சில ஆட்காட்டிகளால் காப்பாற்றப்பட்டு வந்த பிரபல அரிசி கடத்தல் மன்னன் என்று கூறப்படும் கணேசன் என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை (புஃட் செல்) அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம், தங்கம் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்து வரும் தொழிலை செய்து வருகிறாராம். இதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நெட் ஒர்க் வைத்துள்ளாராம். குறிப்பாக வட தமிழகத்தில் ரேஷன் அரிசியை கடத்தி விற்கும் கும்பலுக்கு இவர் தான் தலைவர் என்று கூறப்படுகிறது
இவர் அப்படி வாங்கும் ரேஷன் அரிசிகளை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் பகுதி அருகே பதுக்கிவைக்க பெரிய கிடங்கையே ஏற்படுத்தி வைத்திருப்பதாக தகவல். அதன் அருகே அவ்வளவு எளிதாக நெருங்க முடியாது. முகப்பில் கோழிபண்ணை இருக்கும் அங்கு செக்யூரிட்டிகள் இருப்பார்கள், அதனைக்கடந்து போவது எளிதான காரியம் கிடையாது.
மாநிலம் முழுவதிலும் இருந்து கடத்தப்படும் ரேஷன் அரிசிகளை இங்கு பதுக்கிய பின்னர், அதை கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம். அங்கு இருப்பது தென் மாநிலங்களிலேயே மிகப்பெரிய ராட்சச சைஸ் மில்களாகும். சினிமாக்களில் காட்டப்படுவதைப்போல மெகா சைசில் இருக்கும். அதனுள் பல ரைஸ் மில்களை வைத்திருக்கிறார்கள். அதன் உரிமையாளரின் பெயர் சண்முகம் .
இந்த சண்முகம் தான், குடியாத்தம் கணேசன் மூலமாக தமிழக ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை பள பளவென்று பாலிஷ் செய்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிகளை அள்ளி கொழுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேற்படி சண்முகத்தின் முக்கிய தமிழக ஏஜெண்டே தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் குடியாத்தம் கணேசன் தான் என்று கூறப்படுகிறது.
கடந்த 23.09.2023 அன்று பள்ளிகொண்டா அருகில் 11,400 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்ட வழக்கில் நாகராஜ், லாரி ஓட்டுனர் சிவகுமார் என்பவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில், ஒன்னரை மாதங்களுக்கு பின்னர் குடியாத்தம் கணேசன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கடந்த ஒன்னரை மாதமாக கணேசன் போலிசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இல்லை. சுதந்திரமாக அரிசி கடத்தல் தொழிலை செய்துக் கொண்டுதான் இருந்தார் என்றும் சில ரகசிய தகவல்கள் சொல்கின்றன. அதற்கு ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உடந்தை என்று கூறப்படுகிறது. உயரதிகாரிகளின் உத்தரவை காற்றில் பறக்கவிடும் அந்த அம்மணி வெங்கடேசன் என்கிற போலிஸ்காரர் சொல்லும் வழிமுறைகளைத்தான் பின்பற்றுவாராம். அந்த வெங்கடேசனை பொறுத்தவரை கணேசனுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும் வகையில், துறையில் அனைத்து நடவடிக்கையையும் அவருக்கு லீக் செய்வாராம்.
கணேசனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் உயரதிகாரிகள் மீது மொட்டை கடிதம் போடுவது, இன்ஸ்பெக்டர் பெயரை தவறாக பயன்படுத்தி பலரை மிரட்டி வசூல் செய்வது என வெங்கடேசன் கல்லா கட்டி வருகிறாராம். அதையும் மீறி?!! தான் பிரபல அரிசி கடத்தல் மன்னன் குடியாத்தம் கணேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சட்டபடி அவர் ஜாமீனில் வெளி வரும் வரையில் அவரைச் சார்ந்தவர்கள் இந்த தொழிலை சிறப்பாக செய்வார்களாம். அவர்களுக்கு இதே பாதுகாப்பு போலிசார் தாம்பூலம் வைத்து அரிசிகடத்தலுக்கு ரூட் போட்டுக் கொடுப்பார்கள் இன்று பலர் சொல்கிறார்கள்.
ஆகவே வட மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படும் கணேசனை காப்பாற்றிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலிஸ்காரர் வெங்கடேசன் மீது புஃட் செல் ஐஜி அவர்களுக்கு மேலும் புகார் அனுப்ப சமூக செயற்பாட்டாளர்கள் ரெடியாகிவிட்டனர்.